மீண்டு எழு
சாலை ஓரம் பூக்கள் உண்டு!
பாதை வழிய வண்டிகள் உண்டு!
பார்த்து இரசிக்கும் கண்கள் இல்லை!
மாலை நேரம் முழுமதி உண்டு!
மொட்டைமாடி ஒளிமழை உண்டு!
அள்ளி பருகும் ஆட்கள் இல்லை!
பறந்து செல்லும் புள்ளினம் உண்டு!
பரந்து விரிந்த வானம் உண்டு!
நிமிர்ந்து பார்க்க நேரம் இல்லை!
பாய்ந்து ஓடும் நதிகள் உண்டு!
கரைகள் பாடும் ராகம் உண்டு!
கேட்டு களிக்கும் செவிகள் இல்லை!
ஆறாம் அறிவு உனக்கு உண்டு!
சிந்தனை செய்வாய் மனிதா நன்கு!
எதை தேடிய ஓட்டம் உனது?
குன்றெனக் குவிந்த செல்வம் உண்டு!
முகம் மட்டும் நகும் நட்பு உண்டு!
நிறைவின் நிழலும் மனதில் இல்லை!
மாயக் கடலில் மூழ்கி உனது
வாழ்வின் மதுரம் மாண்டது இன்று!
மீண்டு எழுவாய் மனிதா நன்று!
மகிழ்ச்சி வாழ்வில் நிறைய உண்டு!!