நெஞ்சத்தில் ஒரு நிலவு

#நெஞ்சத்தில் ஒரு நிலா

நெஞ்சத்திலே அந்த நிலா
வந்தமர்ந்த நாள் முதலாய்
துஞ்ச விழி மறந்ததென்ன தோழி - இதய
துடிப்பு மாறி போனதடி தோழி..!

சித்திரையின் கத்திரியில்
தகிக்குமந்த கதிரவனை
குளிர வைத்து பார்க்குமடி தோழி - என்
இதயநிலா காய்ந்ததில்லை போடி..!

கூடுவிட்டு கூடு பாய்ந்து
உயிரிரண்டின் சங்கமங்கள்
நிலவு கண்ட நாள் முதலாய் தோழி - நான்
நினைவுகளை இழக்கிறேன் விழி மூடி.?

நடை மறக்கும் பசி மறக்கும்
நாணத்தோடு மனம் களிக்கும்
எண்ணுலகம் மாறக்கண்டேன் தோழி - அந்த
இன்பம் சொல்ல வார்த்தையில்லை போடி..!

சுட்டுவிரல் அசைவில் அவன்
சுண்டியிழுத்து அணைக்குமந்த
நேரம் சொர்க்கம் மண்ணிலன்றோ தோழி
ச்சீ.. ச்சீ. சொல்லவெட்க மாகுதடி போடி..!

முப்பதுநாள் முழு நிலவு
இருள்வதில்லை என் பொழுது - இன்ப
மின்மினிகள் விழியில் என்றும் தோழி - நெஞ்சில்
முழுமதியாய் நிறைந்துவிட்டான் நாடி..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Feb-19, 12:21 pm)
பார்வை : 513

மேலே