கண் ஆனவன் - கணவன்

கண் விழிக்கையில் முன் தோன்றும் கதிரவன்! -என்
கல்யாண வாழ்வின் துணை அவன்!

கார்முகிலாய் காதல் மழையாய் என்னுள் வந்தவன் - நான்
காணாத கனவுலகை கண்முன் நிறுத்தியவன்!

கூடி வாழும் குடும்ப வாழ்க்கை தந்தவன்!
கூடு கலையாமல் நிதம் கட்டிக்காப்பவன்!

தவறு ஏதும் செய்தால் தனியே வந்து திருத்திடுவான்!
தாய்க்கு தலைமகனாய்! மனைவிக்கு மணாளனாய்!

பள்ளியிலேயே ஒழுக்கம் கற்பி்ப்பவன்- செய்யும்
பணியிலேயே மணிமகுடம் தரித்தவன்
பழக்கத்திலே பணிவானவன்!
பார் புகழும் பண்பாளன் - என் பரந்தாமன்

குறுஞ்செய்தி பகரயிலேயே அழைத்து - உன்
குரல் கேட்க ஆசை என்பான்!
குழந்தை போல் குறும்பு பல நான் செய்ய
சத்தமில்லாமல் அதட்டிடுவான்!
பணிச்சுமையால் சோர்வடைந்தால்
பணிவிடைகள் பல செய்திடுவான்!
பிறந்த நாள் மறந்திடுவான் -
பிறர் அறியாது பரிசு பல தந்திடுவான்!

அவன் செல்ல திட்டலை கேட்க.....
அழைத்திடுவேன் அலைப்பேசியில் பேசவேண்டுமென்று!
நடித்திடுவேன் முக்கியமானதை மறந்தேனென்று!
அழுதிடுவேன் தாய்வீடு செல்வேனென்று!
அடம்பிடிப்பேன் அது இது வேண்டுமென்று!
பயந்திடுவேன் கயிறைப் பாம்பென்று!
பார்த்திடுவேன் பயணம் செய்ய விடுமுறை அன்று!

என் உயிரில் கலந்து உணர்வானவன் - அன்பு காதலன் -
கண்ணாளன் - கண் ஆனவன் - கணவன்!

எழுதியவர் : (3-Apr-19, 6:41 pm)
சேர்த்தது : பரந்தாமன்
பார்வை : 45

மேலே