அந்தாதி

வெண்டளையானியன்ற தாழிசை ...!!!

************************************

அந்தாதி ....!!!

***************

உலகினில் வாழும் உயிர்களைக் காக்கும்
தலைவநின் தாளைச் சரணடைவ தெக்காலம் ? 1

அடைந்த பதவிகளால் ஆணவங்கொள் ளாமல்
கடைவழி காட்டவுன் கண்திறப்ப தெக்காலம்? 2

கண்திறந்து பார்த்துக் கவலைகளைத் தீர்ப்பதற்கு
விண்ணின்று வந்து வினையறுப்ப தெக்காலம் ? 3

அறுக்கும் நினைவுகளால் அன்றாடம் வாட்டி
வறுக்கும் அவலநிலை மாறுவது மெக்காலம் ?4.

மாற்றத்தை வேண்டி வணங்கித் துதிப்பவர்க்கு
ஏற்றத்தைக் காட்டி யிதமளிப்ப தெக்காலம் ? 5.

அளித்தவை யாவும் அவனன்றி யாரால்
எளிதாய்க் கிடைக்கு மெனவறிவ தெக்காலம் ? 6.

அறிவின் துணையோ(டு) அகவிருள் நீங்கிப்
பிறவிப் பெருங்கடலை நீந்துவது மெக்காலம் ? 7.

நீந்தும் பொழுதினிலே நீலகண்டன் தன்கரத்தில்
ஏந்தி யரவணைக்க ஏற்றபொழு தெக்காலம் ? 8.

பொழுதெலாம் வீணாக்கும் புல்லர் களையும்
முழுதாக ஆட்கொண்டு முத்திதர லெக்காலம் ? 9.

முத்திதரு மீசனை முப்போதும் போற்றியே
சுத்தமெய் ஞானத்தைத் துய்த்துணர்வ தெக்காலம் ? 10.

உணர்வில் கலந்தோனை ஓர்ந்துமிக வன்பாய்
வணங்கித் தொழுது வரம்பெறுத லெக்காலம் ?11.

பெறுதற் கரிய பிறவியெடுத் தாலும்
தறுதலையாய்ச் சுற்றுவோருன் தாள்சேர்வ தெக்காலம் ? 12.

சேர்க்கைச் சரியின்றிச் செய்யும் இழிதொழிலால்
பேர்கெட்டோர் இவ்வுலகில் பேறடைவ தெக்காலம் ? 13.

பேறாக எண்ணித்தம் பெற்றோரைப் பேணாத
மாறாக் குணமுடையோர் மாறுவது மெக்காலம் ? 14.

மாறிவரு மிவ்வுலக மாயைகளில் சிக்காமல்
ஆறுதலாய்ப் பக்கமிருந் தாட்கொள்வ தெக்காலம் ? 15.

கொள்கையில் மாறுபட்டுக் குற்றம் புரிவோரின்
கள்ளத் தனம்போக்கிக் காட்சிதர லெக்காலம் ? 16.

காட்சியைக் கண்டவுடன் கண்ணீர்ப் பெருக்கெ
ஓட்டை விடுத்துன்னுள் ஒடுங்குவது மெக்காலம் ? 17.

ஒடுங்கிய நெஞ்சத்தில் ஓங்கார மாகக்
கடுகிநீ வந்தெம்மைக் காத்திடுத லெக்காலம் ? 18.

காத்திருக்கும் வேளைதனில் காலன் அணுகாமல்
கூத்தனுன் பார்வை குளிர்விப்ப தெக்காலம் ? 19.

குளிர்ச்சியைத் தாங்கிக் கொதிப்படக்கும் நின்றன்
வெளிர்நீற்றால் பாவம் விலக்கிடுத லெக்காலம் ? 20.

விலகும்கொடுந் துன்பம் விரிசடையோன் பார்க்க
நிலவும் அமைதியினால் நெஞ்சினிப்ப தெக்காலம் ? 21.

நெஞ்சினிக்கும் மந்திரத்தை நெற்றியில் நீறிட்டு
நஞ்சுண்டோன் நாமம் நவிலுதலு மெக்காலம் ?22.

நாமம் நவில்வோர்கள் நற்கதி பெற்றிடவே
காமத்தைப் போக்கிக் கரையேற்ற லெக்காலம் ? 23.

கரையேறத் தான்விழைவோர் கண்ணீர் உகுக்க
விரைந்துவந்து பேரின்ப வீடளிப்ப தெக்காலம் ? 24 .

வீடுசெல்லும் பேறுபெற்று மேன்மை நிலையடைய
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கூப்பிடுத லெக்காலம் ? 25.

கூப்பிடும் சத்தத்தில் கோயிலைத் தாண்டிவந்து
தீப்பிழம்பாய்த் தோன்றிச் சிலிர்க்கவைப்ப தெக்காலம் ? 26.

சிலிர்த்துப் பரவசத்தில் சேவடியைப் பற்ற
வலிபறந்து போகும் வரங்கிடைத்த லெக்காலம் ? 27.

கிடைத்த பொன்பொருளைக் கிஞ்சித்தும் வேண்டா
அடியாரைப் போல அகந்தெளிவ தெக்காலம் ? 28.

தெளிந்தவறி வின்றிச் செயற்பட்டு வாழ்வில்
இளைத்து நலிந்தோரு மின்புறுத லெக்காலம் ? 29.

இன்புற்ற போதும் இறுமாப்பு கொள்ளாத
அன்பரைக் கண்டே அடிபணித லெக்காலம் ? 30.

பணிவே பெருங்கொடையாய்ப் பைந்தமிழர் போற்றும்
அணியாம் அறிந்தே அதைச்சூட லெக்காலம் ? 31.

சூடிய கங்கையொடு சூலமு மேந்தியவன்
ஆடிய பாதனவன் ஆட்கொள்வ தெக்காலம் ? 32.

ஆட்கொள்ள வேண்டுமெனில் ஐம்புலன்கள் தானடங்கி
எட்டா உயரத்தை எட்டுவது மெக்காலம் ? 33.

எட்டும் வழியை எளியவர்க்கும் காட்டுபவன்
பட்டு மலர்ப்பாதம் பற்றுவது மெக்காலம் ? 34.

பற்றற்றான் தாளினைப் பற்றிப் பரவசத்தில்
நற்றமிழில் பாவியற்றி நாடுவது மெக்காலம் ? 35.

நாடும் நலம்பெறவே நாதன் புகழ்பாடத்
தேடும் இதயத்தில் தேன்பொழிவ தெக்காலம் ? 36.

தேனாம் வாசகத்தைத் தித்திக்கப் பாடுவோர்க்கு
மீனாள் துணைவன் விழிமலர்வ தெக்காலம் ? 37.

மலரடியைப் பற்றி மனமுருகி வேண்ட
குலம்விளங்கக் காப்போன் குறைதீர்ப்ப தெக்காலம் ? 38.

குறைகளால் நொந்து குமுறியழு வோர்க்கு
மறைபோற்று மீசன்நல் வாழ்வளிப்ப தெக்காலம் ? 39.

வாழ்வில் வருந்துயரால் உள்ளம் நிலைகுலைய
ஆழ்மனக்கா யங்களை ஆற்றுவது மெக்காலம் ? 40 .

காயங்க ளாற்றநெற்றிக் கண்திறந்து பார்த்தாலென்
தூயவனே உன்கருணைத் துளிர்விடுத லெக்காலம் ? 41.

துளிர்விடு மாசைகளைச் சுத்தமாய்ப் போக்கி
எளியேனைக் கைகளில் ஏந்துவது மெக்காலம் ? 42.

ஏந்திய சூலத்தால் என்பிழைகள் சாய்த்துவிட்டு
நீந்தும் வழித்துணைக்கு நீவருத லெக்காலம் ? 43 .

நீவரு வாயெனவே நெஞ்சத் துடிப்போடு
பாவியென் உள்ளம் பணிசெய்வ தெக்காலம்? 44.

செய்யும் பணிக்குச் சிவனார் துணையிருக்கப்
பெய்யும் மழைபோலே பீடுறுவ தெக்காலம் ? 45 .

பீடுடைய பெம்மான் பிறவிப் பிணிதீர்க்கக்
காடுடைய நீரணிந்து காட்சிதர லெக்காலம் ? 46.

காட்சியில் மெய்சிலிர்க்கக் காந்தமாய் உள்ளமீர்க்கச்
சாட்சியாய் இங்குவந்து தானணைப்ப தெக்காலம் ? 47.

அணைக்கும் கரங்களினால் ஆன்மசுகம் தந்தே
இணக்கமுடன் என்னை இயக்குவது மெக்காலம் ? 48.

இயக்கமும் காப்புமாய் என்னையும் நீயே
மயக்கம் தெளிய மகிழ்விப்ப தெக்காலம் ? 49.

மகிழும் பொழுதெலாம் மன்றாடி யுன்னை
உகந்த இறையாய் உலகியம்ப லெக்காலம் ? 50.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Apr-19, 11:06 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே