எது தவறு

எது தவறு?

ராக்கி இந்த தபால் ஒரு வாரமாய் இருக்கே? அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்பனுவங்களுக்கே அனுப்பிச்சுடு என்றார். சாம்ராஜ் நகர் போஸ்ட் மாஸ்டர் சதானந்தன், போஸ்ட் மேன் ராக்கியிடம்..
அந்த அட்ரசுல இருக்கறவரு இரண்டு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாராம், அதான் என்ன பண்ணறது அப்படீன்னு வச்சிருக்கேன்.
தபால் எங்கிருந்து வந்திருக்கு? கோயமுத்தூருல இருந்து சார்.
சரி அந்த கடுதாசிய நாளைக்கே கோயமுத்தூருக்கு திருப்பி அனுப்பிச்சிடு.
சரி என்று கடிதத்தை எடுத்தவன் கடிதம் பிரிந்திருப்பதை பார்த்து அதை நன்றாக ஒட்டி அனுப்பலாம் என்று முழுவதையும் பிரித்து ஒட்டுவதற்காக பசையை தேடினான்.அதற்குள் வீசிய காற்றில் கடிதம் இரண்டாக விரிய பசையை எடுத்து வந்தவன் கண்களில் அது பட தன்னை மீறிய செயலாக அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தான்.
கோயமுத்தூர் வடவள்ளியில் வந்து இறங்கியவன் அங்கிருந்து மாதவபுரம் செல்ல எத்தனை மணிக்கு பஸ் வரும் என்று அருகிலிருந்த கடையில் கேட்க அவர்கள் அரை மணி நேரத்தில் ஒரு மினி பஸ் வரும் அதில் ஏறி மாதவபுரம் என்று கேட்டாலே இறக்கி விட்டு விடுவார்கள் என்று பொறுப்பாக பதில் தந்தார்கள். இவனும் மினி பஸ்சுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
மாதவபுரம் வந்து இறங்கியவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, சுற்றிலும் பசேல் என்று வயல்களும் தோட்டங்களுமே இருந்தன. ஊர் என்று பார்த்தால் சற்று தொலைவில் நான்கைந்து குடிசைகள் மட்டுமே இருந்தன. இவன் மெதுவாக அந்த குடிசைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஒரு பெரியவர் தள்ளாடிக்கொண்டு இவன் எதிரே நடந்து வந்தவர் கையில் ஒரு கைப்பையுடன் இவன் நடந்து வருவதை பார்த்து சற்று அருகில் வந்து முகத்தை உற்று பார்த்து யாரு தம்பி? என்று கேட்டார். இவன் முனியாண்டி என்று ஆரம்பிக்க ஏய்யா உங்க ஆத்தா சாக கிடக்கறா? இத்தனை நாளா எங்கய்யா போய் தொலைஞ்சே? போ..போ..கடை கோட்டுல இருக்கற குடிசையில அவளை படுக்க வச்சிருக்கு., போய் பாரு இப்பாவாவது வந்து சேர்ந்தியே, தனக்குள் பேசிக்கொண்டே இவனை கடந்து நடந்து சென்றார்.
இவன் குடிசை வாசலை அடைந்து கதவு இல்லாத அந்த குடிசைக்குள் எட்டி பார்த்தான். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. சிறிது நேரம் கழித்து மெல்லிய உருவம் ஒன்று தரையில் ஒரு ஓலைப்பாயை போட்டு படுக்கவக்கப்பட்டிருந்தது கண்களுக்கு தெரிந்தது. அது உயிருடன் இருக்கிறதா, என்று தெரியாதவாறு அசைவற்று இருந்தது. இவன் காலணிகளை வெளியே கழற்றி போட்டு விட்டு மெல்ல குடிசைக்குள் கால் வைத்து அந்த உருவத்தின் அருகில் நின்று அந்த உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அது உயிருடன் இருப்பதற்கு அறிகுறியாக மெல்ல உடலை அசைத்த்து. இவன் நின்றதை எப்படி உணர்ந்த்தோ தெரியவில்லை “பூவாயி” என்று மெல்லிய குரலில் கூப்பிட இவன் மெல்ல முனியாண்டி என்று சொல்ல ஆரம்பித்தான்.
எங்கிருந்துதான் அந்த பலம் வந்ததோ? “சாமி” என்று தன் இரு கைகளையும் நீட்ட இவன் தன் கைப்பையை கீழே வைத்து அந்த உருவத்தின் கைகளை பற்றிக்கொண்டான். சாமி..சாமி எங்கய்யா போயிட்டே? உன் ஆத்தா என்ன பாவம் பண்ணுச்சு. இந்த ஆத்தாளை ஒரு நாளாவது உனக்கு பாக்கணும்னு தோணுச்சா? அவனின் கை முகம் தலை போன்றவைகளை தடவிக்கொண்டே உன் ஆத்தாளுக்கு கண் பார்வையும் போயிடுச்சு, இத்தனை வருசம் கழிச்சு வர்ற என் பையனை பார்க்க கூட இந்த ஆத்தானாலே முடியாம போச்சே, புலம்பியவாறு அவன் எங்கு விட்டு ஓடி விடுவானோ என்று பயந்து தன் மெல்லிய கரங்களால் இறுக்கி பிடித்துக்கொண்டாள்.
வாசலில் நிழலாட திரும்பி பார்த்தான். ஒரு சிறுமி கிழிசல் சட்டையுடன் தலை எண்ணெயை பார்த்து பல மாதங்களாயிருக்கும். உள்ளே வந்து கொண்டிருந்தாள். இவனை கட்டி பிடித்துக்கொண்டிருந்த ஆத்தா அரவம் கேட்டு பூவாயி உன் அண்ணன் வந்துட்டாண்டி இனிமேல் உனக்கு நல்ல காலம்தான். அவளையும் அருகில் அழைத்து இருவரையும் தன் குச்சி கைகளால் அணைதுக்கொண்டாள். அந்த சிறுமி ஆத்தாளிடமிருந்து தன்னை மெல்ல விடுவித்து கொண்டு ஆத்தா நான் போய் அண்ன்னுக்கு ஏதாவது சாப்பிட கொண்டாறேன். வெளியே கிளம்பினாள். இவன் கொஞ்சம் நில்லு பாப்பா எங்க போய் எனக்கு சாப்பிடறதுக்கு கொண்டு வருவே? இங்க பக்கத்துல போனா ஏதாவது பழசு கொடுப்பாங்க, அதை வாங்கிட்டு வருவேன்.தினக்கும் எனக்கும் ஆத்தாளுக்கும் பக்கத்துல இருக்கற தோட்டத்துக்காரங்க பழசு கொடுப்பாங்க.நான் காலையில கொஞ்சம் சாப்பிட்டுட்டு ஆத்தாளையும் சாப்பிட வச்சுட்டு, ஆத்தா பக்கத்துல மிச்சத்தையும் வச்சிட்டு போயிடுவேன். ஆத்தா எப்படியாச்சும் மதியம் சாப்புட்டுக்கும். நான் ஸ்கூல்ல மதியம் சாப்பிட்டுக்குவேன். இராத்திரிக்கும் இதே மாதிரி தோட்டத்துக்காரங்க வீட்டுக்கு போயி அவள் சொல்லிக்கொண்டே போக
இவனுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது..பூவாயியை அணைத்து கொண்டு நீ எங்கேயும் போக வேண்டாம், பக்கத்துல எங்க கடை இருக்குதுன்னு சொல்லு, நாம் இரண்டு பேரும் போய் சப்பிட்டுட்டு ஆத்தாளுக்கும் ஏதாவது வாங்கிட்டு வரலாம். அவளுடன் நடக்க தொடங்கினான்.
அந்த சிறுமி எதிரில் வந்தவர்களிடம் எங்கண்னன் வந்திட்டாங்க, பெருமையுடன் சொல்லிக்கொண்டே வந்தாள். இரண்டு நாட்கள் அந்த மூவரும் மிக மிக சந்தோசமாக இருந்தனர். மூன்றாம் நாள் காலையில் ஆத்தாளின் உடலில் அசைவுகள் எதுவும் ஏற்படவில்லை. தன் மூச்சை நிறுத்தியிருந்தாள்.
பூவாயியை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டவன் மேற்கொண்டு அங்குள்ளவர்கள் துணையுடன் நல்லபடியாக ஆத்தாளை அடக்கம் செய்து விட்டு பூவாயியை தன்னுடன் கூட்டி செல்வதாக ஊர் மக்களிடம் கூறிவிட்டு கிளம்பினான்.
போஸ்ட் மாஸ்டர் சதானந்தன் என்னய்யா ராக்கி பத்து நாள் லீவு போட்டுட்டு அஞ்சு நாள்ல வந்துட்டே? கேட்டவரிடம் ஒரு காகித்த்தை நீட்டினான். என்னயா பேப்பர் இது? என்றவர் மேலோட்டமாய் பார்வையிட்டு “ராஜினாமா கடிதம்” என்று போட்டிருப்பதை பார்த்தவர் என்ன்னய்யா என்று இவனை நிமிர்ந்து பார்க்க இவன் மேலே படிச்சு பாருங்க சார் என்றான்.
ஒரு தபால் ஊழியன் பிறர் கடிதத்தை படிக்க கூடாது என்பது சட்டம் அதை மீறி நான் ஒரு கடிதத்தை படித்து பார்த்து விட்டேன் அதனால் என்னுடைய வேலைக்கு நான் தகுதியற்றவனாகி விட்டேன். ஆகவே நான் எனது உத்தியோகத்தை ராஜினாமா செய்கிறேன், எந்த லெட்டரையா நீ படிச்சே கொண்டா அதை அவர் கேட்டவுடன் இவன் தன் பாக்கெட்டிலிருந்து அன்றைக்கு அவர் திருப்பி அனுப்ப சொல்லி இருந்த கடித்த்தை நீட்டினான். அவர் அதை பிரித்து பாத்து தானும் படிக்க ஆரம்பித்தார்.
“அன்புள்ள முனியாண்டி அண்ணே” உங்களை நான் சின்ன குழந்தையா இருந்தப்ப பார்த்தது, அதற்கப்புறம் பார்க்கவேயில்லை. இதை கூட ஆத்தா சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆத்தா எப்பவும் உன்னைய பத்தியே பேசிகிட்டிருக்கும். இப்ப ஆத்தாளுக்கு கண்ணும் போயிடுச்சு. எந்திரிச்சு எல்லாம் நடக்க கூட முடியாது. நான் சாகறதுக்குள்ள என் பையனை பார்த்துருவனான்னு அழுதுகிட்டு இருக்குது. இங்க நாங்க இரண்டு பேர்தான் இருக்கோம். இப்ப கூட ஆத்தா ஒரு பேப்பர்ல எழுது வச்சிருந்த உன் அட்ரசை பாத்துட்டு இதை எழுதறேன். எப்படியாச்சும் வந்துடு, ஆத்தா உன் ஞாபகமாவே இருக்கு. நான் ஒழுங்கா ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கேன்.
கடிதத்தை கண்ணீர் வழிய படித்தவர் மேற்கொண்டு அவன் என்ன செய்திருப்பான் என்பதை ஊகித்துக்கொண்டு அந்த பெண்ணை கூட்டிகிட்டு வந்திட்டியா? என்ன செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கே?
படிக்க வைக்கப்போறேன், நல்லா படிச்சு முன்னுக்கு கொண்டு வரப்போறேன். தெரிஞ்சோ தெரியாமலோ என்னை அண்ணனா ஏத்துகிட்டிருக்கு அந்த அண்ணனோட கடமைய நான் செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்படீன்னா இந்த ராஜினாமா லெட்டரை முதல்ல கிழிச்சு போடு. ஏன்னா நானும் இந்த லெட்டரை படிச்சதுனால இப்ப நானும் ரிசைன் பண்ணனும், அது என்னால முடியாது.
நாம் இரண்டு பேரும் செஞ்சது தப்புன்னா மேல இருக்கறவன் தண்டனை கொடுக்கட்டும்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-May-19, 11:44 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ethu thavaru
பார்வை : 169

மேலே