அம்மா அம்மா

கருவிற் சுமந்தாளைக் கண்ணெனக் காத்தாளை
அருவியாய்க் கொட்டியெனை அன்பில் நனைத்தாளை
உருகும் மெழுகாய் உழைத்தெம்மைப் பேணி
விரும்பியன ஈடேற்றி வெற்றிபெறச் செய்தாளை
மருந்தாய் விளங்கி மனக்காய மாற்றி
வருத்தந் துடைத்தாளை வாஞ்சைமிகக் கொண்டாளை
இருள்துடைக்கும் பேரொளியாய் என்னுள் நிறைந்தாளைத்
திருத்தாள் பணிந்து தினமும் தொழுவேனே !!

பாலோடு பாசத்தைப் பாங்காய்ப் பகிர்ந்தாளைத்
தாலாட்டுப் பாட்டில் தமிழூட்டி விட்டாளைச்
சேலாடும் கண்களுக்குள் சேயென்னைக் காத்தாளை
வாலாடும் பட்டமாய் வானுயரச் செய்தாளை
மாலோன் மருகனாம் வள்ளிமண வாளனை
வேலோடு வந்து வினைதீர்க்க எம்பொருட்டு
மேலான பத்தியினால் வேண்டித் தொழுதாளை
ஆலாய் விரிந்தாளை அன்புடன் வாழ்த்துவனே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-May-19, 9:25 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 295

மேலே