நறுந்தொகை 24 - 27
24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மாறாது.
26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது.
அதிவீரராம பாண்டியர்
பொழிப்புரை:
சுட்டாலும் சிவந்த பொன்னானது தனது ஒளி குறையாது. அதன் ஒளி மிகவே செய்யும்.
அரைத்தாலும் சந்தனக் கட்டையானது தனது வாசனை நீங்காது மிகவே செய்யும்.
அகிற் கட்டையை நெருப்பிலிட்டுப் புகையச் செய்தாலும் அது தீமையான நாற்றம் வீசாது; நன்மணங் கமழும்.
கலக்கினாலும் குளிர்ந்த கடலானது சேறாக மாட்டாது. அது தெளிவாகவே யிருக்கும்.
அதுபோல, நற்குணமுடைய பெரியோர் எவ்வளவு துன்பம் செய்தாலும் அவர்கள் தம் பெருமைக் குணத்தைக் கைவிடார்.