முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா - நீதிநெறி விளக்கம் 13
நேரிசை வெண்பா
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம்; - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா; யாரே
அழகுக்கு அழகு செய்வார். 13
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
நன்கு வடிவமைக்கப்பட்ட முழு மணிகளாற் செய்யப்பட்ட நகைக்கு வேறு துணை நகை வேண்டா; எவர்தாம் அழகுக்கு அழகு செய்வார்கள்’ அதுபோல, படித்தவர்களுக்கு அப்படிப்பினழகே அழகாவதல்லாமல் வேறொரு நகையழகு வேண்டுவதில்லையாம்.
விளக்கம்:
உடைத்துச் சாணை தீட்டப்பட்ட பொடிமணிகளாலல்லாமல் முழு மணிகளாலேயே செய்யப்பட்ட நகையாம் என்றற்கு முழுமணிப் பூண் என்றார்.
கல்வி நலன் என்பது நல்ல கல்வியைக் குறித்தது; கல்வியழகு என்பது பொருள்.
முழுமணி – மாணிக்கம்; ;அஃது அறிவு நூற் கல்வி.
`ஒருமொழி யொழிதன் இனங்கொளற்கு உரித்தே’ என்பதனால் நகை என்னும் உவமையோடு, உடை முதலான அழகுகளையுங் கொள்க, இவையெல்லாம் தரும் அழகுகளை விடக் கல்வியாலாகும் அழகு பெரிதாம்.
(நலன் - சிறப்பு, கலன் - அணிகலன், முற்ற முழுமணிப் பூண் - நன்கு வடிவமைக்கப் பட்ட மணி,
பூண் - அழகுசெய்தல்) கல்வி கற்றவர்களுக்கு எந்த அணிகலமும் தேவை இல்லை என்று நீதிநெறி விளக்கம் விளக்கியுள்ளது.