முழுவதூஉங் கற்றனம் என்று களியற்க – நீதிநெறி விளக்கம் 14
நேரிசை வெண்பா
முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉங்
கற்றனம் என்று களியற்க – சிற்றுளியால்
கல்லுந் தகருங் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால். 14
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
பொன்னாலான காதணியை உடைய பெண்ணே! எல்லாம்தெரிந்தவர் உலகத்தில் ஒருவரும் இல்லை; ஆதலால், எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்று கர்வம் கொள்ளாதே;
ஏனென்றால், மிகச்சிறிய உளியினால் மலைகளும் உடையும்; ஆனால் கொல்லனுடைய உலைக்களத்தில் உள்ள சம்மட்டியினால் அம்மலைகள் உடையாது.
விளக்கம்:
கல்-மலை; கொல் - கொல்லன்; உலை – உலைக்களம், கூடம் என்பது சம்மட்டியை உணர்த்துகிறது.
முதலிரண்டடிகளுக்குப் பின்னிரண்டடியின் உவமையால் ஏதுக் கூறினார்.
உவமம், சிறிது கற்றாரும் பெரிது கற்றாரை வென்று விடுவர் என்னும் வேறொரு பொருளையும் உட்கொண்டு நின்றது.
கருத்து:
கற்றனம் என்று செருக்கடையலாகாது.