புணர்ச்சி இலக்கணம் பாகம் 4

பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற
புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்
பாகம் 4
வழங்குபவர்

திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22

அன்பு மாணவர்களே! கடந்த பதிப்பில் வெளியிட்டிருந்த புணர்ச்சி விதிகள் உங்களுக்குப் புரிந்தும், பிடித்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ இந்த நான்காம் பாகத்தினை உங்களுக்காக வெளியிடுகின்றேன்.
பயில்வோமா! வாருங்கள்: ஐயம் இருப்பின் தெளிவு பெற இதோ என் கைப்பேசி எண்கள் உங்களுக்காக. 9843297197 / 9043069396
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பினையும் நல்லாதரவையும் தர அன்புடன் பணிகின்றேன். இந்த நூல்கள் அனைவற்றையும் என் அன்பு பெற்றோர்களின் பொற்பாத கமலங்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்.

தொடர்வோம்…..
இந்த பகுதியில் முதலில் நாம் காண இருப்பது பூப்பெயர் புணர்ச்சி:
நூற்பா:
“பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்.”
நன்னூல் - 200
விளக்கம்:
(பூ என்னும் சொல்லிற்கு, அழகு, இடம், இந்து உப்பு, விளைவுப் போகம், இருக்குதல், இலை, ஓமாக்கினி, ஓர் எழுத்து, ஒரு கண்நோய், ஒரு நகரம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புஷ்பம், பொலிவு போன்ற பலபொருள்கள் உண்டு.)
இனி நூற்பா விளக்கத்தைக் காணலாம்.
மேற் கூறிய பல பொருட்களைக் கொண்ட பூ என்னும் சொல்லின் முன் வல்லினம் வந்து புணர்ந்தால்,
அதாவது க,ச,த,ப வரிசைகளுள் ஏதாவது ஒன்று வந்து புணர்ந்தால்(சேர்ந்தால்) அதற்கு இனமான (அதாவது அந்த வல்லெழுத்துக்கு இனமான மெல்லின மெய் எழுத்துக்களும்) வந்து சேரும் என்பதாகும். இன எழுத்துக்கள் குறித்து முன்பு வெளியிட்ட பகுதியில் தெளிவாகக் கண்டோம். இருப்பினும் பின்வரும் வல்லின எழுத்திற்கு இனங்கள் யாவை என்பதை மீண்டும் நினைவில் கொள்வோம். (க-ங, ச-ஞ, த-ந, ப-ம).
இனி எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
எடுத்துக்காட்டு:1
பூ+கொடி = பூங்கொடி
இதில் நிலைமொழி ஈற்றில் பூ என்ற எழுத்தும் வருமொழி முதலில் கொ(க்+ஒ=கொ) ககர வரிசையில் கொ என்ற எழுத்து வந்துள்ளமையைக் காண்க.
இவை இரண்டும் இணையும் இடத்தில் ங் என்ற மெல்லின மெய் எழுத்து தோன்றி பூங்கொடி எனப் புணர்ந்துள்ளதை(சேர்ந்துள்ளதைக்) காண்க.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்
பூஞ்சோலை,
பூந்தடம்,
பூம்பொழில்
----------------
அடுத்து நாம் காண இருப்பது தேன் பெயர் புணர்ச்சி இலக்கணம்.
நூற்பா:
“தேன்மொழி மெய்வரின் இயல்பும் மென்மை
மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலும்ஆம் இருவழி”
நன்னூல் 214
நூற்பா விளக்கம்:
நிலைமொழியில் வரும் தேன் என்ற சொல்லிற்கு முன்பாக வருமொழியில்,
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
ஆகிய மூன்று மெய் எழுத்துகளும் வந்து புணரும்(சேரும்)
அவ்வாறு வரும் பொழுது
 நிலை மொழி ஈற்றில் உள்ள ன் என்ற மெய் எழுத்து இயல்பாக நிற்கும்.
 மெல்லின மெய் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று வந்தால் சில பொழுது இயல்பாகவும்,
 சில பொழுது நிலைமொழி ஈற்று னகரம்(ன் என்ற மெய் எழுத்துக் கெட்டும்(மறைந்தும்), புணரும்(சேரும்).
• வருமொழியில் வல்லெழுத்துக்கள் வந்தால்,
• நிலைமொழி ஈற்றெழுத்து(ன் என்ற மெய் எழுத்து) இயல்பாகவோ,
• கெட்டோ(மறைந்தோ),
• அல்லது வந்த வல்லின மெய்யெழுத்தாகவே மீண்டும் வந்து புணர்ந்தோ(சேர்ந்தோ),
• அல்லது வருமொழி வல்லின மெய்யெழுத்திற்கு ஏற்ற இன எழுத்தாக மாற்றம் பெற்றோ புணரும்(சேரும்) என்பதாகும்.
என்ன மாணவர்களே! குழப்பமாக உள்ளதா? கவலை படாதீர்கள். எடுத்துக்காட்டுகள் காணும் பொழுது எளிதாக விளங்கிவிடும் சரிதானே!
இனி ஒவ்வொரு விளக்கத்திற்கும் தனித்தனி எடுத்துக்காட்டுகள் காண்போம்.
1. தேன் என்ற சொல்லிற்கு முன்பாக மூவினமும் வருதலை எடுத்துக்காட்டுடன் காணலாம்.(வல்லினம், மெல்லினம், இடையினம்)
எடுத்துக்காட்டு:
வல்லினம்:
தேன் + குழம்பு
மெல்லினம்:
தேன் + மொழி
இடையினம்:
தேன் + யாது

2. மெல்லினம் வரும் பொழுது ஏற்படும் மாற்றங்கள்:
எடுத்துக்காட்டு:
தேன் + மொழி
தேன்மொழி, தேமொழி
3. வல்லினம் வரும்பொழுது ஏற்படும் மாற்றங்கள்:
தேன் + குழம்பு
தேன்குழம்பு, தேக்குழம்பு, தேங்குழம்பு
இப்பொழுது எளிமையாக உள்ளதா?
மேற்கூறிய இவை அனைத்தும் அல்வழிப்புணர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்.

இனிவேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வருகின்றது என்பதைக் காண்போமா?
தேன் + கடுமை = தேன்கடுமை
தேன் + மலிவு = தேன்மலிவு
தேன் + யாப்பு = தேன்யாப்பு என்று இயல்பாகப் புணர்ந்துள்ளமையைக் காண்க. (அதாவது தேனினது கடுமை என்ற 6ஆம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதைக் காண்க. இவைபோன்றே மற்றவற்றையும் விரிவாகப் பயின்று புரிந்துகொள்ளுதல் வேண்டும்) அல்வழிப்புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி போன்றவற்றின் விளக்கங்களை முந்தைய பதிவுகளில் நாம தெளிவாகக் கண்டிருக்கினறோம் அல்லவா! அதனால் குழப்பம் வேண்டாமே!

அடுத்து நாம் காண இருப்ப்து மகர ஈற்றுப் புணர்ச்சி:
நூற்பா:
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்”
நன்னூல்: 219
நூற்பா விளக்கம்:
 நிலைமொழி ஈற்றில் மகர எழுத்தை (அதாவது ம் என்ற மெய் எழுத்தை) இறுதியாக உடைய சொற்களில் ம் என்ற மெய்யெழுத்து(மகர ஈறு) கெடவும்(மறைந்து போகும்).
 அவ்வாறு மகரம் கெட்ட பிறகு உயிர் ஈறு போல நிற்கும்.
 அதனை அடுத்து வருமொழியில் உயிர் எழுத்து வந்தால், உடம்படு மெய் தோன்றும்.
 குறிப்பு: (உடம்படு மெய் என்பதைப் பற்றி கடந்த பதிவில் தெளிவாகக் கண்டுள்ளோம்.)
 வருமொழியில் வல்லின எழுத்து வந்தால் எந்த எழுத்து வந்துள்ளதோ அது மிக்குப் புணரும். அதாவது மீண்டும் எழுதப்பெறும்.
 அதே போல் வல்லின மெய்க்கு இன எழுத்தாகவும் மாற்றம் அடைந்து புணரும்.
 வருமொழியில் மெல்லினம் அல்லது இடையின மெய் வந்தால் இயல்பாகப் புணரும் என்பதாகும்.
இனி எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காண்போம்.
எடுத்துக் காட்டு 1
வட்டம் + ஆழி
வட்டவாழி
இந்த எடுத்துக் காட்டில்
வட்டம் என்பதில் உள்ள ம் என்ற மெய் எழுத்து கெட்டதைக் காணுங்கள்
அவ்வாறு கெட்ட நிலையில் வட்ட(ட் + அ) என்று உயிர் ஈறு போல் நின்றதைக் காணுங்கள்
அதன் பிறகு வட்ட + ஆழி என வருமொழி முதலெழுத்தும் உயிர் எழுத்தாக இருப்பதால் அங்கு வகரம் உடன்படு மெய்யெழுத்தாக வந்து வட்ட + வ் + ஆழி வட்டவாழி என்று புணர்ந்துள்ளமையைக் காண்க.
எடுத்துக்காட்டு 2
வட்டம் + கடல் = வட்டக் கடல்
இந்த எடுத்துக்காட்டில் முதலில் மகரம் அழிந்து அடுத்து வருமொழி முதல் எழுத்தான வல்லெழுத்து மீண்டும் மிக்குப் புணர்ந்துள்ளமையைக் காண்க.
வட்ட + க் + கல் வட்டக்கல்
எடுத்துக்காட்டு 3
நம் + கை = நங்கை
இந்த எடுத்துக்காட்டில் நம் என்பதில் உள்ள மகரம் கெட்டு, வருமொழி முதல் எழுத்தாகிய ககரத்திற்கு இனமான ஙகர மெய் தோன்றி(ங் என்ற மெய் எழுத்து) நங்கை என்று புணர்ந்திருப்பதைக் காண்க..
இவை போன்றே பல சொற்களை எழுதிப் பயிற்சி பெறுக.
--------------------
அடுத்து நாம் காண இருப்பது தேர்விற்குரிய மற்றொரு நூற்பா:
நூற்பா:
“நெடிலொடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள்
டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே”
நன்னூல்- 183
நூற்பா விளக்கம்:
நிலை மொழி ஈற்றில் நெடில் தொடர்க் குற்றியலுகரமோ அல்லது உயிர்த் தொடர்க் குற்றியலுகரமோ வந்திருந்தால் அது வேற்றுமைப் புணர்ச்சியாயின் நிலை மொழி ஈற்றில் வந்துள்ள (ட்,ற்) என்ற மெய் எழுத்து இரட்டித்துப் புணரும் அதாவது நிலைமொழி ஈற்றில் வந்த மெய் எழுத்து இரண்டு முறை எழுதப்படும்.
இனி எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
எடுத்துக் காட்டு 1
ஆடு + கால் = ஆட்டுக் கால்
ஆடு + தலை = ஆட்டுத் தலை
எடுத்துக்காட்டு 2
பாறு + அடி = பாற்றடி (பாறு என்றால் பருந்து என்று பொருள்)
பாறு + யாப்பு = பாற்றுயாப்பு

இனி உயிர்த் தொடரில் எவ்வாறு புணர்கிறது என்பதைக் காண்போம்.
எடுத்துக்காட்டு: 1
முருடு கால் முருட்டுக்கால் (முருடு என்றால் விறகு என்று பொருள்)
களிறு யானை களிற்றுயானை
-----------------------------
அடுத்து நாம் காண இருப்பது,
பொதுத் தேர்வில் கேட்கப்படும் மற்றொரு நூற்பாவைப் பற்றியது.
நூற்பா:s
“னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங் காலே.”
நன்னூல் -237
நூற்பா விளக்கம்:
நிலைமொழி ஈற்றில் னகரம் அல்லது லகரம் வந்திருந்து(ன் மற்றும் ல் என்ற என்ற மெய் எழுத்து வந்திருந்து) வருமொழி முதலில் தகரம் வந்திருந்தால் (தகர வரிசையில் ஏதாவது ஒன்று வந்திருந்தால்- த, தா, தி, தீ….. தொள) அந்த தகரம் றகரம் ஆகும்.
எடுத்துக்காட்டு: 1
பொன் + தீது = பொன்றீது
கல் + தீது = கற்றீது
இதைப் போன்றே நிலைமொழி ஈற்றில் னகரம் அல்லது லனரம் வந்திருந்து(ன் மற்றும் ல் என்ற என்ற மெய் எழுத்து வந்திருந்து) வருமொழி முதலில் நகரம் வந்திருந்தால் (நகர வரிசையில் ஏதாவது ஒன்று வந்திருந்தால்- ந, நா, நி, நீ….. நொள) அந்த நகரம் னகரம் ஆகும்.
எடுத்துக்காட்டு 2
பொன் = நன்று = பொன்னன்று
கல் + நன்று = கன்னன்று
குறிப்பு -மேலே குறிப்பிட்ட இவை அனைத்தும் அல்வழிப் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
அடுத்ததாக,
இந்த னகர லகரங்கள் வேற்றுமையில் எவ்வாறு புணர்கின்றன(சேர்கின்றன) என்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு 1
பொன் + தீமை = பொன்றீமை
கல் + தீமை = கற்றீமை
எடுத்துக்காட்டு 2
பொன் + நன்மை = பொன்னன்மை
கல் + நன்மை = கன்னன்மை
இவ்வாறு வேற்றுமை மற்றும் அல்வழி ஆகிய இரண்டிலும் னகர லகரங்கள் ஒன்றுபோல் புணர்ந்துள்ளமையைக் காண்க.
என்ன மாணவர்களே! இனி புணர்ச்சி இலக்கணம் என்றால் கடினம் என்று எண்ண மாட்டீர்கள் தானே!
அடுத்து நாம் காண இருப்பது தேர்விற்குரிய மற்றொரு முக்கியமான புணர்ச்சி விதியாகும்.
அதாவது ணகர னகரப் புணர்ச்சி.
நூற்பா:
“ணன வல்லினம்வரட் டறவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு
அனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே”
நன்னூல் 209
ம்…. ம்….. அன்பு மாணவர்களே! விளக்கத்தை உங்களாலேயே கூறமுடிவதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இதைத்தானே நானும் எதிர்ப்பார்த்தேன். வாழத்துக் கொள். இனி என்ன சக்கைப் போடு போடப்போகிறீர்கள். சரிதானே! வாழ்த்துக்கள்…. வாழ்த்துக்கள்…. உங்களிடம் இத்தனை விரைவான முன்னேற்றத்தைக் காணும் போது என் உள்ளம் களிபேருவகை எய்தத்தான் செய்கின்றது.

சரி தொடர்வோமா?
நூற்பா விளக்கம்:
 நிலைமொழி ஈற்றில் ணகரம் வந்திருந்து வருமொழி முதலில் வல்லினம் வந்தால் அந்த ணகரம்(ண் என்ற மெய் எழுத்து) டகரமாகத் திரியும்(ட் என்ற மெய் எழுத்தாக மாற்றம் அடையும்.
எடு;த்துக்காட்டு 1
சிறுகண் களிறு சிறுகட்களிறு
 நிலைமொழி ஈற்றில் னகரம் வந்திருந்து வருமொழி முதலில் வல்லினம் வந்தால் அந்த னகரம்(ன் என்ற மெய் எழுத்து றகரமாகத் (ற் என்ற மெய்யெழுத்தாக) திரியும்.
எடுத்துக் காட்டு 2
பொன் + தட்டு = பொற்றட்டு
 என்ன மாணவர்களே இங்கு ஒன்றை கவனித்தீர்களா? அதாவது வருமொழியில் உள்ள த என்ற எழுத்தும் ற என்ற எழுத்தாக மாற்றம் பெற்றுள்ளதைத் தான் கூறினேன்.
 அதாவது ன் என்ற மெய் ற் என்ற மெய்யாக மாற்றம் பெறும் போது இயற்கையாகவே தவும் (த என்ற எழுத்தும்)றவாக( ற என்ற எழுத்தாக) மாற்றம் பெறும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அல்வழிப் புணர்ச்சியில் இதுபோன்ற தொல்லைகள் எல்லாம் இல்லை. என்ன வந்தாலும் அதாவது வருமொழியில் எந்த மெய் எழுத்து (வல்லினம்,
மெல்லினம், இடையயினம், ஆகிய எந்த மெய் எழுத்து) வந்திருந்தாலும் அவை இயல்பாகப் புணரும்(சேரும்)
எடுத்துக் காட்டு 1(வல்லினம்)
மண் + கடிது = மண் கடிது
எடுத்துக்காட்டு 2 (மெல்லினம்)
பொன் + ஞான்றது = பொன்ஞான்றது - (இதில் ஞான்றது என்றால் சிறந்தது என்று பொருள்.)
எடுத்துக்காட்டு 3 (இடையினம்)
பொன் + யாது = பொன்யாது
சரிதானே! மாணவர்களே.
அடுத்ததாக நாம் காண இருப்பது தேர்வில் கேட்கப்படும் மற்றொரு புணர்ச்சி விதி:
நூற்பா:
“குறிலிணைவு இல்லா ணனக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடே”
நன்னூல் - 210
நூற்பா விளக்கம்:
நிலைமொழி ஈற்றில் தனிக்குறிலைச் சாராது, (அதாவது மண் ம தனிக்குறில் இதில் தனிக்குறிலை அடுத்து ண் என்ற மெய் எழுத்து வந்திருப்பதைக் காண்க) பிற எழுத்துக்களோடு இணைந்து வரும் ணகர னகரங்களை (அதாவது ண் மற்றும் ன் என்ற மெய்யெழுத்துக்கள்) அடுத்து வருமொழியில் நகரத்துடன் (அதாவது ந, நா, நி, நீ….. நௌ) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று) தொடங்கும் சொல் வந்தால் அவை இரண்டும் புணர்வதற்கான(சேர்வதற்கான) வழி இல்லையாதலால், நிலைமொழி ஈற்று ண் அல்லது ன் என்ற எழுத்துக்கள் கெட்டு(மறைந்து) வருமொழி நகரமும்(ந என்ற எழுத்தும்) நிலைமொழி ஈற்றில் உள்ள உயிர் எழுத்துடன் இணைந்து, மாற்றம் அடையும் என்பதாகும்.
இனி சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
முதலில் வேற்றுமையில் எவ்வாறு புணர்கின்றது என்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு 1
பாண் + நன்று = பாணன்று
இதில் முதலில் ண் என்ற மெய் எழுத்து மறைந்துவிட்டது. அவ்வாறு மறைந்த நிலையில்,
பா + நன்று என்று நிற்கும்.
நிலைமொழியில் உள்ள பா என்ற எழுத்தைப் பிரித்தால் ப் ஆ என்று பிரியும்.
இந்த ஆ என்ற எழுத்து வருமொழியில் உள்ள ந என்ற எழுத்து ண் என்று திரிந்து பின்னர் ண் ஆ ண என இணைந்து பாணன்று என்றாகும்.
இனி அல்வழிப் புணர்ச்சியில் எவ்வாறு புணர்கின்றது(சேர்கின்றது) என்பதைப் பார்க்கலாம்).
எடுத்துக்காட்டு
அரசன் + நல்லவன் = அரசனல்லவன்
இதில் நிலைமொழி ஈற்றில் உள்ள ன் என்ற மெய் எழுத்து முதலில் கெடும்(மறையும்). அவ்வாறு மறைந்தபின்னர்,
அரச + நல்லவன் என்றிருக்கும்
இப்பொழுது நிலைமொழி ஈற்று ச என்ற எழுத்தைப் பிரித்தால் ச் அ ச என்று பிரியும்.
அந்த அ என்ற எழுத்துடன் வருமொழியில் உள்ள ந என்ற எழுத்து ன என்ற மாற்றம் அடைந்தபின்னர் (ன அ ண)
அரசனன்று என்று மாற்றம் அடையும்.
இதனை நன்கு கவனித்தால் ண் வரும் பொழுது ணகரமும் ன் வரும் பொழுது னகரமும் வந்து சேர்ந்திருப்பது புலனாகும்.

இனி அடுத்த பதிவில் எண் பெயர் புணர்ச்சி என்ற பதிவினைப் புதுமை நோக்கோடு காணலாம் என்று கூறி உங்களிடம் விடைபெறுவது உங்கள் தமிழாசிரியை
ஸ்ரீ.விஜயலஷ்மி.
தொடாந்து உங்கள் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றேன்.
மிக்க நன்றி.

புணர்ச்சி இலக்கணம் தொடரும்…………
------------------------

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (15-Jan-20, 1:00 pm)
பார்வை : 841

சிறந்த கட்டுரைகள்

மேலே