கடல் ஒரு பெரும் வீடு

கடல் ஒரு பெரும் வீடு

அலையலையாய்
கூரை வேய்ந்தும்
வீடெங்கும் தண்ணீர்தான்

அலை வந்து முற்றம்
பெருக்கி கழுவி
நீர்க்குமிழிகளைப்
புள்ளி வைத்து
இட்ட கோலத்தை
மணல் குடித்துச்
சிரிக்கிறது

அலை திரும்பி
நனைந்த ஈர மணலில்
பூக்களாகவே
முளைத்து விடுகின்றன
குழந்தைகள்

ஈர மணலள்ளி
குன்று குன்றுகளாக
குவித்து விளையாடும்
குழந்தைகளின் கற்பனைகள்
சமைந்துவிடுகின்றன
வீடுகளாக

மேலெழுந்து
ஆச்சரியம் ஆச்சரியமாக
கரையில் வந்து பார்க்கும்
கடல்
கூட்டி நுரையள்ளி
குவிக்கும் நீரில்
சமைவதில்லை
ஒரு வீடும்

எழுதியவர் : முகிலன் (24-Jan-20, 12:09 am)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 157

மேலே