தந்தையர் தின வாழ்த்துக்கள்

சுயத்தை விற்று
உழைப்பை இரைத்து
உதிரம் வறண்டு
குடும்பத்தை கரையேற்றும்
கட்டு மரம் !

தன்னம்பிக்கை
தைரியம்
தெளிவு- இவை
தோய்ந்த
மூன்றெழுத்து மந்திரம்
தந்தை !

கண்டிப்பு
காட்டிடும்
கண்கள் - முள்ளாய்
அன்பு வழிய
அக்கறை கொஞ்சும்
அழகு மனம் - மலராய் !

அப்பா !
உந்தன்
வியர்வை நாற்றத்தில்
உழைப்பு மணக்குது !
நேர்மை மணக்குது !
புகழும் மணக்குது !

ரேகைகள் தேய்ந்து
மரத்துப் போன
விரல்களின் ஸ்பரிசத்தில்
வாழ்வின்
சோதனைகளை
சொல்லாமல்
உணரவைத்தாய் !

எழுதியவர் : வைஷுவின் வெங்கி (21-Jun-20, 3:50 pm)
சேர்த்தது : வைஷுவின் வெங்கி
பார்வை : 712

மேலே