காக்கா கருப்பான கதை

முந்தைய காலத்துல காக்கா'ங்கலாம் வெள்ளையா இருந்துச்சாம். ஒரு நாள், ஒரு காக்கா, ஒரு வீட்டு மாடியில சாப்பிட்டு இருந்துச்சாம். நிறைய சாப்பாடு இருந்ததால, 'கா கா'னு கரைஞ்சி'கிட்டு மத்த காகங்களை கூப்பிடுச்சாம். இத பார்த்த ஒரு சேவல், நிறய காக்கா வந்தா, தனக்கு சாப்பாடு கிடைக்காம போய்டுமோனு பயந்து போய், ஒரு திட்டம் போட்டுச்சாம். அந்த காக்கா கிட்ட பொய் சொல்லிச்சாம், "இதோபாரு, நீ, 'கா கா'னு கத்துனா, சீக்ரம் கருப்பா ஆயிடுவ, அதனால, அப்டி கத்தாதன்னு சொல்லிச்சாம்". காக்காக்கு சேவல் சூழ்ச்சி பண்றது புரிஞ்சுபோச்சு. எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்னு நினைக்காம, தான் மட்டும் சாப்பிடணும்னு நினைக்கிற சேவல்'மேல வருத்தப் பட்டுச்சு. "இந்த சேவல் மாதிரி , இந்த உலகத்துல எத்தனை சேவல் இருக்கோ, அதுங்க எல்லாம், இதே மாதிரி பேசி, காக்காக்களோட மனச மாத்திடுமோன்னு" பயந்து, ரொம்ப நேரம் தியானம் பண்ணிச்சாம். சாமி வந்து "என்ன வரம் வேணும்னு " கேட்டுச்சாம். அதுக்கு அந்த காக்கா, "காக்கா'ங்க ஷேர் பண்ணி சாப்பிட்றத தடுக்கிறதுக்கு, சேவல்கள், 'கா கா' கத்துனா சீக்ரம், காக்கா கருப்பாயிடும்'னு மிரட்டுது, ஏதாச்சும் சில காக்கா இதுக்கு பயந்து ஷேர் பண்றத, நிறுத்தினாலும், நிறுத்திடும், அதனால, அதுக்கு முன்னாடியே, காக்கா'வான எங்க எல்லாத்தையும் கருப்பா மாத்திடுன்னு", வரம், கேட்டுச்சாம், கடவுளும், கொடுத்தாராம்.

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (2-Jul-20, 11:43 pm)
பார்வை : 134

மேலே