வானம் எங்கள் காணி நிலம்

#வானம் எங்கள் காணிநிலம்.

பூமியில் விதைக்க
வானில் அறுவடை
புதிதான விவசாயம்..!

இரண்டு விளைச்சல்
ஒற்றை விதைப்பில்
இலாபம் பலவாகும்.!

உயர்ந்த பசுமை
கண்டால் உவகை
கொள்ளும் ஆகாயம்..!

ஆனந்தக் கண்ணீர்
வடிக்கு மதனால்
வந்திடும் ஆதாயம்..!

மலையின் சிகரம்
தொட்டே மகிழும்
மழையால் அபிஷேகம்..!

தரைக்கும் சுவருக்கும்
தாரை வார்ப்பின் - வானும்
மழையின் வேரறுக்கும்

சாகுபடி யின்றிக்
கொள்முத லில்லை - மரக்
கன்றுகள் நட்டுவிடு..!

மரங்கள் உயர
பயிர்கள் உயரும்
மகசூல் கண்டுவிடு..!

பிரபஞ்சத்தில் பகிரா
இடங்களும் உண்டு
நிலவும் வானுமென..!

காணிக்கும் மேலாய்
அகண்ட வானில்
மீனும் மேகமென..!

விண்மீன் விளைச்சல்
இரவினில் உண்டு
சிமிட்டும் சிங்காரம்..!

விடியலில் அறுவடை
செய்திடும் கதிரவன்
வாய்க்கே உணவாகும்..!

செயற்கைக்கோள் பல
வானில் விதைத்தோம்
சீரிய நற்பலனாம்..!

சந்து பொந்தென
சாலைக ளனைத்தும்
சரியாய்க் காட்டிடுமாம்..!

ஆய்வுக் கூடங்கள்
ஆகாயம் கண்டிட
ஏவுகணையேற்றம்

பால்வழிக் கதைகள்
படம்பிடித் தனுப்பிட
பல்வித முன்னேற்றம்

ஒலி ஒளி வாங்கி
உடனுடன் சேர்க்கும்
கைபேசிக் கணினிவழி..!

வளர்ச்சியில் நவீனம்
வானின் வழியே
வணிகமும் அதனூடே..

காணி காணியாய்
வானெனும் நிலத்தில்
வளங்கள் சிறப்போடே..!

விரிநில வானும்
அடங்கிடுமோ சிறு
காணியின் கணக்காலே..!

உழுதல் விதைத்தல்
நடுதல் அனைத்தும்
பூமியில் தாராளம்

விந்தைகள் புரியும்
அந்த நிலத்தில்
விளைச்சல் ஏராளம்…!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (13-Jul-20, 9:34 pm)
பார்வை : 105

மேலே