வேலி தாண்டிய பின் தாலி ஆசை
வேலி தாண்டிய பின் தாலி ஆசை
அம்மா இல்லாத குடும்பம்
முடக்கு வாதத்தில்
மூன்று வருடங்களாக
படுக்கையில்
முடங்கி விட்ட அப்பா..
ரேசன் அட்டையில்
குடும்பதலைவன்
என்கிற பெயரில்
இன்னமும்
அப்பா பெயர்தான்..
பொறுப்புகளை சுமந்த
காலங்கள் காலாவதியாகி
மூன்றாடுகள் கடந்த பின்னும்..!
வயசுக்கு வந்த தங்கை
உதவாக்கரை அண்ணன்
அரசுக் கல்லூரியில்
இளங்களைப் பட்டம்
பயிலும்
மீசை முளைக்க
ஆரம்பித்தத் தம்பி...
அத்தனை ஜீவன்களுக்கும்
ஆதாரமாய் இருப்பவள்
என்றாவது ஒருநாளில்
எவனுக்கோ
தாரமாகும் கனவுகளில்..!
வேலையின் நிமித்தம்
நேர்முகத் தேர்விற்கு
சென்றிருந்த தருணம்
நிகழ்ந்த அசம்பாவத்தில்தான்
தொலைக்கக் கூடாத
ஒற்றைத் தொலைத்திருந்தாள்
தாரிகா...
குடும்ப கஷ்டங்களைத்
தொலைத்துவிடுவதற்காய்..!
முதலில் கொஞ்சம்
கூச்ச நாச்சம்…
முழுவதுமாக தொழில்
பழக்கத்திற்கு
வந்துவிட்ட பிற்பாடு
மறந்தே போனது..
இல்லை... இல்லை
மரத்தே போனது..
"கூச்சம் என்றால் என்ன"
என்று
கேள்வி கேட்டாலும்
கடிந்து கொள்ளாதீர்கள் அவளை....
நிறைய நாட்களாய் அவள்
வாடிக்கையாளர்களை
மெரீனா சாலைகளில்
இருந்தே கண்டெடுத்திருக்கிறாள்..
இப்போதெல்லாம் கண்டவர்கள்
அவளைக் கண்டு பிடித்துவிடுகிறார்கள்..
வாடிக்கையாளர்களை
ஈர்க்கும் வித்தை
உடலோடு ஊறிவிட்டிருந்தது
ஓரக்கண் பார்வையும்
தானாக சரியும் முந்தானையும்
சகல பாக்கியங்களைக்
கொடுத்தருள்கிறது
இப்போதெல்லாம் ...!
எல்லோரையும் போல்
வாழவேண்டும்
என்கிற அவளின் நினைவுகளில்
வந்து போகும்
மாங்கல்யம் மட்டும்
சங்கல்பம் எடுத்துக்கொண்டு
கூறிச் செல்கிறது
"இனி என் மீது ஆசை கொள்ளாதே
இருட்டை வெளிச்சமாக்கிக் கொண்ட
உனக்கு இனி
வெளிச்சங்களும் இருட்டுக்களே.."
பகலில் உறங்கிக் கிடப்பவளின்
தலையணை
எப்போதும் ஈரக்கசிவுடனே..!
ஸ்ஸ்ஸ்ஸ்…
ஆறுதலுக்காகவும் அவளை
எவரும் எழுப்பிவிடாதீர்கள்
உறக்கத்திலாவது
அவளுக்கு
நிம்மதி கிடைத்துவிட்டுப் போகட்டும்..!
#சொ.சாந்தி