குமரேச சதகம் – செய்யுளின் இயல்பு - பாடல் 86

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எழுத்தசைகள் சீர்தளைகள் அடிதொடைகள் சிதையா
திருக்கவே வேண்டுமப்பா
ஈரைம்பொ ருத்தமொடு மதுரமாய்ப் பளபளப்
பினியசொற்க ளமையவேண்டும்

அழுத்தம்மிகு குறளினுக் கொப்பாக வேபொருள்
அடக்கமும் இருக்கவேண்டும்
அன்பான பாவினம் இசைந்துவரல் வேண்டும்முன்
அலங்காரம் உற்றதுறையில்

பழுத்துளம் உவந்தோசை உற்றுவரல் வேண்டும்
படிக்குமிசை கூடல்வேண்டும்
பாங்காக இன்னவை பொருந்திடச் சொற்கவிதை
பாடிற்சிறப் பென்பர்காண்

மழுத்தினம் செங்கைதனில் வைத்தகங் காளனருள்
மைந்தனென வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 86

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

எப்போதும் அழகிய கையில் மழுவை யேந்திய சிவபிரான் அருளிய திருமகன் எனத் தோன்றிய
முருகனே!, மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

அப்பா, (புலவர் அறிந்த) அச்செய்யுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை எனும் உறுப்பிலக்கணம் கெடாமல் இருத்தல் வேண்டும்; பத்துப் பொருத்தமும் இனிமையும் விளக்கமும் அழகிய சொற்களுமாகப் பொருந்த வேண்டும்;

ஆழ்ந்த பொருள்மிகுந்த திருக்குறளைப் போலப் பொருளடக்கியும் இருத்தல் வேண்டும்; அன்பு மிக்க பாவின் இனமும் ஒத்திருத்தல் வேண்டும்; பழமையான அணிபொருந்திய நெறியிலே முதிர்ந்து மனம் மகிழும் ஒலியமைந்து வருதல் வேண்டும்;

படிப்பதற்கு இனிய நடை பொருந்தவேண்டும்; ஒழுங்காக இவைகள் அமையுமாறு சொல்லப்படும் செய்யுள் பாடினால் நன்று என்பர் புலவர்.

விளக்கவுரை:

கங்காளம் - முதுகெலும்பு. கங்காளன்; எலும்பணிந்த சிவபிரான்.

இரண்டு + ஐந்து + பொருத்தம் ஈரைம் பொருத்தம். அவை : மங்கலம், சொல், எழுத்து, தானம் பால்,
உணா, வருணம், நாள், கதி, கணம், எனப்படும்.

பா: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என ஐவகைப்படும்.

ஒவ்வொரு பாவிற்கும் தாழிசை, துறை, விருத்தம் என மூவகை இனங்களுண்டு. மருட்பாவிற்கு மட்டும் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-20, 3:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே