வாழ்க்கை என்றால் என்ன
வாழ்க்கை என்றால் என்ன..?
இந்த கேள்வியை பிறரை பார்த்து, நீங்கள் கேட்கும் முன்பு' உங்களை பார்த்து கேட்டு பாருங்கள்,
எத்தனை வகையான பதில்கள் அணிவகுத்து உங்கள் முன்னால் நிற்கும் பாருங்கள்.
உயிரோடு இருப்பது...
மகிழ்ச்சியாக இருப்பது...
பணம் புகழுடன் இருப்பது...
வெற்றி, தோல்வி...
இப்படியாக பதில்கள் தொடரும்.
ஆனால்...இவற்றில் எது வாழ்க்கை என்பதை உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மனிதனாக பிறந்த நாம் எல்லோரும், வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்றால்...தெரியாது,,.ஆனால், ஒரு நிமிடத்தில் நாம் எடுக்கும் முடிவு, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பது உண்மை.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். இது ஆளுக்கு ஆள், நேரத்திற்கு நேரம் மாறுபடும். வெற்றி பெற்றவன் தோல்வி அடைகிறான். தோல்வி அடைந்தவன் வெற்றி பெறுகிறான். சிரித்தவன்அழுகிறான்...
அழுதவன் சிரிக்கிறான்.
மேலும், தான் அறிவாளி என்று எண்ணி செயல்படும் மனிதனால், வெற்றிபெற முடிவதில்லை. காரணம், வாழ்க்கைக்கு அறிவு மட்டும் அடிப்படையில்லை. இப்படியாக, வாழ்க்கையை பற்றி தீர்மானமாக எதுவும், எவராலும் சொல்லமுடியாது. ஆனால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் வெற்றிபெற "மனோபலம்" ஒரு தீர்வாக இருக்கின்றது.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும், நேர்மறை எண்ணங்கள்தான், நம்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்,
சில நேரங்களில், சிலருக்கு தங்களது "முதல் வெற்றி" ஒரு அசாதாரண
நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில், சிலருக்கு அந்த வெற்றியே ஆணவத்தை வளர்த்துவிடுகிறது. ஒரு வேளை தோல்வி ஏற்பட்டு இருந்தால் , ஒரு நிதானம் இருந்திருக்கும் , அடுத்து வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே, ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில், அடக்கம், கவனம், நிதானம், இவற்றை எல்லாம் "தோல்வி" தான் முறையாக கற்று தருகிறது.
---"அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக்கொள்ள மாட்டான். இது ஜெர்மானிய பழமொழியாகும்.
நம் வாழ்வின் விருப்பத்தை பூர்த்தி செய்ய நமக்கு என்ன தேவை....
நம் வாழ்க்கையின் பயன் என்ன... இது போன்ற கேள்விகளுக்கு விடையை தேடி தேடியே.. நம்மில் பலர் தங்களது வாழ்க்கையை சரியாக தேர்வு செய்ய முடியாமல் தவிக்கின்றார்கள்.
முடிவாக, பயனுள்ள வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை சரியான நேரத்தில், பயன்படுத்தி கொள்ளாமல் தோல்வி அடைய காரணம் நம்முடைய பொறுப்பின்மைதான் என்றால் மிகையாகாது.
--கோவை சுபா