சாதிகள் இல்லையடி பெண்ணே

சாதிகள் இல்லையடி பெண்ணே

1996 ஆம் ஆண்டு.

மின்சார தொடர் வண்டி அன்று ஏனோ ஆட்கள் அதிகம் இல்லாமல் இருந்தது. யாழினி பிராயிணித்த பெண்களுக்கான பிரேத்யேக பெட்டியில் எண்ணி ஐந்து பேர் கூட இல்லை. சனிக்கிழமை, அதுவும் மத்திய வேளை அதனால் தான் பெட்டி வெறிச்சோடி இருக்கிறதோ. தாம்பரத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்று தரும் நிரந்திர பணியில் தன்னை கடந்த ஆறு மாத காலமாக அற்பணித்துள்ளாள்.


சம்பளம் ஓரளவுக்கு கெளரமாக இருந்தது. வழக்கமாக அவள் பணிப்புரியும் பள்ளி சனிகிழமையும் முழு நேர பள்ளியாக  இயங்கும், ஆனால் இந்த சனி பள்ளி பராமரிப்பு பணி காரணமாக ஆரம்ப பள்ளி மாணாக்களுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அறிவிக்கபட்டது. மின்சார வண்டி தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்தை சென்னை கடற்கரைக்கு கிளம்பியது. வண்டி கிளம்பும் கடைசி நேரத்தில் அந்த ஜோடி பெட்டியில் ஏறினார்கள்.
தள்ளு வண்டியில் முகம் அடையாளமே தெரியாத வண்ணம் முகம் சிதைந்து காணப்பட்ட அவன் கைகளும், கால்களும் அந்ந கொடிய நோயால் முழுவதுமாக களவாடபட்டுயிருந்தது. அவன் உட்கார்ந்துயிருந்த வண்டியை பிடித்த வண்ணம் இருந்த பெண்மனி முகமும் தீயில் சிதைந்து முகமாக முற்றிலும் அடையாளம் தெரியாதவளாய் காட்சியளித்தாள். ஆட்கள் அதிகம் இல்லாத அந்த பெட்டியில் அந்த ஜோடி பிச்சை எடுக்கவில்லை. பெட்டிகுள் வராமல் ஏறும் நடைபாதையிலேயே அவள் நிற்க, நாலு சின்ன சக்கரம் பொருந்திய சதுரமான மரபலகையில் அவன் அமர்ந்திருந்தான்.
" சுசிலா"
" என்ன டி எம் எஸ்"
" ஒரு பாட்டு பாடேன்"
" என்ன பாட்டு பாட"
" உன் பாட்டு தான்"
" ஓ, அதுவா, பாடரேன்"
அவன் பாட ஆரம்பித்தான்.
" அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெலிப்பு, என்னெஞ்சு குலுங்குதடி, சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சுவப்பு...."
உண்மையில் ஏறகுறைய டி எம் எஸ் குரல் போலவே பாடலை மிக அழகாக பாடி முடித்தான்.
" சபாஷ், டி எம் எஸ்"
" சுசிலா நீ ஒரு பாட்டு பாடேன்"
" நானா, சரி பாடரேன்"
" சரவண பொய்கையில் நீராடி...

" சுசிலா கலக்கிட்ட, சபாஷ்".
அவர்கள் பாடிய இரண்டு பாடலையும் மெய் மறந்து கேட்டாள் யாழினி.

திடிர் என்று அந்த ஜோடி விண்ணை பிளக்கும் வண்ணம் சிரித்தார்கள்.
ஏன் அவர்கள் சிரிக்கிறார்கள் என்று யாழினியால் யூகிக்க இயலவில்லை. மிஞ்சி, மிஞ்சி போனால் இவர்கள் வாழ்க்கை இன்னும் ஆறுமாத காலமோ, ஒரு வருடமோ,  ஆனால் எந்த ஒரு கவலையும் இல்லாமல் எப்படி இந்த ஜோடியால் மட்டும் மனதைவிட்டு சந்தோஷமாக சிரிக்க முடிகிறது. அந்த ஜோடி பழவந்தாங்களில் இறங்கிவிட்டனர்.
ஜன்னலோரம் நன்கு காற்று வீச, இறங்கிய அந்த ஆனந்த ஜோடியை பார்த்திருந்த யாழினியின் கண்களுக்கு படிப்படியாக அவர்கள் சின்ன புள்ளியாக மாறி மறைந்தே விட்டார்கள். வழக்கமாக இப்படி இடம்  கிடைத்தால் யாழினி தன்னை அறியாமல் உறங்கிவிடுவாள். அன்று அவள் கண்களை மூடியும் உறக்கம் வரவில்லை.
அந்த ஜோடி பாடல்கள் மனதில் ஓடியது. அவள் எண்ணமும் பின்னோக்கி பயணம் செய்தது.

அன்று பஸ்ஸில் நல்ல கூட்டம். யாழினி அவள் தோழியின் மடியில் அமர்திருக்க, பஸ் ஜென்னல் வழியே அந்த கனமான நான்கு நோட்டு புத்தகங்கள் யாழினி மடியில் போடப்பட்டது. " ப்பிளீஸ், வச்சிகுங்க, கடைசி ஸ்டாப்புல கலெக்ட் பண்ணிக்கிறேன்"
தமிழ் தன்மையுடன் கேட்க, யாழினி தலை அசைத்தாள்.
மண்டகபட்டில் இருந்து விழுப்புரம் வரை காலை ஏழரை மணி முதல் எட்டரை மணி வரை தினம் ரேவதியில்( பஸ்ஸின் பெயர்) டீச்சர் டிரைனிங் படிப்புக்காக பயணம்.
புத்தகம் அவளிடம் சமர்பித்த தமிழ் பி.எஸ்.சி. படிப்பை விழுப்புரம் அரசினர் கலை கல்லாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறான்.
இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரர்கள் தான். சிறு வயதில் இருந்தே தெரியும். ஆனால் பேசியது இல்லை. யாழினி மேல் வகுப்பு சமூகத்தை சார்ந்தவள். தமிழ் பட்டியல் சமூகத்தை சார்ந்தவன். நாகரீகம் என்ன தான் வளர்ந்தாலும், சாதி ரீதியான பாகுபாடு, மிகபெரிய ஏற்ற தாழ்வு, தீண்டாமை எல்லாம் அங்கே இருக்க தான் செய்தது. அந்த கிராமத்தில் சாதி பேதம் தலைவிரித்தாடியது.

அளவுக்குகதிமான கூட்டம் நாளுக்கு நாள் ரேவதியில் அதிமானதால், தமிழ் அவன் பாட புத்தகத்தை பஸ் ஜன்னலின் வழியே நிறந்திரமாக அவள் மடியில் சமர்பிப்பதை வழக்கமாகவே பழக்க படுத்தி கொண்டான். அவளும் சூழ்நிலை காரணமாக மறுப்பேதும் இதுநாள் வரை கூறவில்லை. அன்று அவளிடம் கொடுத்த நோட்டு புத்தகம் ஜென்னலின் வழியே அதிவேக காற்று வீசியதால் திறந்து கொண்டது. அழகான கையெழுத்து அவளை ஈர்க்க, அதை படித்தாள்.

ஹைக்கூ

நான்கு கண்களின் விபத்து
காதல்.
- தமிழ்.


ஹைக்கூ

தீண்டாமை ஒரு பாவ செயல்
பாட புத்தகத்தில் மட்டும்.
- தமிழ்

ஏழையும், வறுமையும்
இணைபிரியா
நண்பர்கள்
- தமிழ்

உலையில்
சோறு பொங்கியது
பொங்கியது
ஏழை உழவனின் உதிரம்
- தமிழ்.

தடபுடலான விருந்து
அப்பாவின் படதிற்கு
முன்னால்
- தமிழ்

அவள் இடை♥️

இடையா அல்லது
காணல்
நீரா
இடையா அல்லது
தொடுவானமா
இடையா அல்லது
இல்லாத
இறைவனா
- தமிழ்.

ஹைக்கூ கவிதையில் லயித்த யாழினி
அந்த நோட்டு புத்தகத்தை மேலும் புரட்ட, அதற்குள் கடைசி பஸ் ஸ்டாப் வர , உடனே அதை மூடிவிட்டாள்.
என்றும் இல்லாத உடல் மொழியில் தமிழின் புத்தங்களை அவனிடம் கொடுத்தாள்.
கல்லூரியில் அவளுக்கு பாடத்தில் கவணம் செல்லவில்லை. தமிழின் கவிதைகள், தமிழின் முகமும் அவ்வபோது அவள் மணகண் முன்னே வந்து, வந்து சென்றது.

அடுத்த நாளும், தமிழின் நோட்டு புத்தகத்து புரட்டிய அவளுக்கு கண்களுக்கு புலப்பட்டது ஒரு மடித்த கடிதம்.
மடித்த காகிதத்தில் மேல் பக்கத்தில்
" யாழினி உனக்கு தான்"
என்று முத்து, முத்தான கையெழுத்தில் எழுதியிருந்தது. கடிதத்தை எடுத்து தன் ஜாக்கெட்டுகுள் சிறை வைத்தாள்.

அன்றும் அவளுக்கு கல்லூரியில் இறுப்பு கொள்ளவில்லை. எப்போது வீட்டுக்கு போவோம். எப்போது தமிழ் எழுதிய கடிதத்தை படிப்போம். மிக ஆவலுடன் காணப்பட்டாள். பரபரப்பு அவளை முழுவதும் தொற்றி கொள்ள,தமிழ் அவள் முன்னே வந்து, வந்து புன்முறுவல் செய்தான்.

அவளுடைய அறையை நன்கு தாளிட்டாள்.
மின்விசிறியை பறக்க விட்டாள். தன் கட்டிலின் மெத்தையில் விழுந்த அவள், தன் ஜாக்கெட்டில் இருந்து, தமிழ் அவளுக்கு கொடுத்த கடிதத்துக்கு விடுதலை அளித்தாள். விடுதலை அடைந்த கடிதம் சிறைவாசமே சிறந்தது என்றதால், கடிதம் கண்ணிர் வடித்தது.
ஆவலுடன் கடிதத்தை பிரித்தாள்
ஈரம் அடைந்த அந்த கடிதம் மிக ஈரமான எழுத்துக்களால் நிரம்பியிருந்தது.

யாழினி,
பெயரே ஒரு கவிதை.
பெயரே ஒரு இசை கருவி.
உன்னை நினைத்து இதோ என்
கவிதை.

"உன் இதழே வீணை!!
அதில் வரிகள் தந்திகள்!!
என் இதழ் கொண்டு
புது ராகம் மீட்டவா!!
புத்தம் புது உலகுக்கு அழைத்து செல்லவா...."
- தமிழ்

உன்னை நான் காதலிக்கிறேன்.
நீ அதற்கு சம்மதித்தால் நாளை
கல்லூரி வரும்போது தலையில் கனகாம்பரம் பூ சூடி வர வேண்டும்
மிகுந்த ஆவலுடன்
உன் தமிழ்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் யாழினி.
உள்ளம் உல்லாச ஊஞ்சலில் ஆடியது.
மணம் பட்டாம்பூச்சியன பறந்தது.
தமிழ்.. தமிழ்.. அழகான பெயர்.
உன்னை காதலிக்கவில்லை என்றால்
நான் தமிழ் பெண்ணே இல்லை.

இரண்டு முழம் கனகாம்பரம் பூவை தழைய, தழைய தலையில் சூடிய யாழினி
தமிழின் தரிசினத்திற்கு காத்திருக்க.
வழக்கமாக நோட்டு புத்தகம் அவள் மடியில் வந்து அமர, காதலின் வெற்றி கொடியை இருவரும் கண்களால் ஏற்றினர். காதல் மனிதனின் உரிமை. ஏற்ற தாழ்வு தெரியாதது காதல். இயற்கை மானுடனுக்கு அளித்த வரம் காதல். மனித காதல் மகோன்னதனமானது.

யாழினி, தமிழ் காதல் கண்களில் ஆரம்பித்து, அவர்கள் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு முன்னேறியது. கலாச்சாரத்தை, பண்பாட்டையும் அவனும், அவளும் கடைபிடிக்க தவறவில்லை. தமிழ் அவள் மனதில் மட்டும் அல்ல அவள் உணர்விலும், உயிரிலும் இரண்டர கலந்துவிட்டான். இதை விட ஒரு படி மேலே போய், கனவில் யாழினியை மனைவியாகவே கருதி கற்பனை வாழ்வில் சஞ்சரித்தான் தமிழ்.
தூய்மையான காதலை கொண்டாடிய இளம் நெஞ்சங்களுக்கு பின் வரும் காலங்களின் பேராபத்து வரும் என்று தெரியாமல் இல்லை. என்றாலும் அவர்களின் காதல் என்ற சுனாமி, எதிர்ப்புகளை அடித்து துவம்சம் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கை இருவரிடம் ஆழமாக இருந்தது.

" எனக்கு, இப்ப கல்யாணம் வேண்டாம் அம்மா"
" ஏண்டி"
" இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்"
" அவசரம் எல்லாம் இல்லடி, வழக்கமா நம்ம ஜாதியில் பழக்கம் இது தானே"
" அப்ப, ஏன் டீச்சர் டிரைனிங் படிக்க வச்சீங்க"
" அதுக்காக,நல்ல வர வரும் போது அந்த சந்தர்பத்த நழுவ விட முடியுமா"
" எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். டீச்சர் டிரைனிங் இன்னும் இரண்டு மாசத்துல முடிச்சிடும். அப்புறம் நல்ல வேலை கிடைக்கும். நல்லா சம்பாதிப்பேன்"
" நீ டீச்சர் டிரைனிங் முடி டீ. அப்புறம் நிச்சயமா கல்யாணம் தான். அதுவரைக்கும் இந்த வரன் காத்திருப்பான்"
" அப்ப நான் வேலைக்கு போகிறது"
" ஏண்டி, நமக்கு காசு பணம் குறைச்சலாவா இருக்கு. நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்"
" சரிம்மா"
" தங்கம், இப்ப தான் நீ என் மவ".

நீங்காத சோகம் இந்த காதலர்கிளைடையே சூழ்ந்து கொள்ள, எதிர்கால திட்டம் தீட்டினர்.

தமிழ் பஸ்ட் கிளாஸில் பி.எஸ்.ஸி பாஸ் செய்யான். யாழினியும் டீச்சர் டிரைனிங் வெற்றியுடன் முடித்தாள்.

யாழினிக்கு கல்யாண வேலை அவர்கள் வீட்டில் ஆரம்பமானது. கடலில் மூழ்கிய கப்பல் போல் கன்னத்தில் கை வைத்தவளாய் யாழினி. ஆழமாக யோசித்தாள். முடிவு செய்தாள்.

" ஏங்க, நம்மல எல்லாம் ஏமாத்திட்டு அந்த திருட்டு சிருக்கி, யோரோ தமிழாம், காலணி பையனுடன் கம்பிய நீட்டிட்டா... நம்ம குல கெளரவத்தை அடியோடு குழி தோண்டி புதைச்சுட்டா.. சண்டாலி... கள்லுலி... இப்படி என்ன நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டாளே.. படுபாவி... அவ.. நல்லா இருக்க மாட்டா... அவ நல்லவா இருக்க மாட்டா.. இனி நம்ம எப்படி வெளிய தெருவுல நடமாடறது.. புரியலையே... புலப்ப விட்டுடாலே... புறம்போக்கு நாயி...போயும் போயி ஒரு காலணி பையனோடவா ஓடனும்.. அவ்வளவு தெனவு எடுத்தவளா போயிட்டாளா...உறுபடமாட்டா.. அவ உறுபடமாட்ட... யாழினியின் அம்மா கதறல் நீண்டு கொண்ட போனது.
ஆட்கள் எங்கு வலை போட்டு வீசியும் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை. அவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் சொல்லவும் யாழனி பெற்றோர்கள் தயங்கினர். தமிழின் வீட்டுக்கு ஆட்கள் அனுப்பி மிரட்டியும் அவர்களிடம் இருந்தும் எந்த ஒரு தகலும் பெற இயலவில்லை.

தமிழின் சென்னை நண்பன் வீட்டின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இந்த ஜோடி தஞ்சம் அடைந்தனர். அது திருவெல்லிகேனி கடலோரத்தில் ஒரு அழகிய குப்பம். தமிழின் அந்த மீனவ நண்பன் இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைத்தான். அந்த பத்துக்கு பத்து அறையில் இந்த புதுமண தம்பதிகள் தன் வாழ்க்கையை தொடங்கினர். தமிழுக்கு ஒரு சின்ன கம்பனியில் சேல்ஸ் மேன் உத்தியோகம் கிடைத்தது. ஏழாயிரம் சம்பளம். மீனவ நண்பனிடம் நன்றி கூறிவிட்டு, அதே குப்பத்தில் ஒரு சின்ன வாடகை வீட்டுக்கு குடியேறினார்கள் தமிழும் யாழினியும்.
தமிழ் தன் பெற்றோருக்கு தன் இருப்பிடம் குறித்து தகவல் கடிதம் மூலம் தெரிவித்தான். இறத்கிடையில் யாழிணி கர்பமானாள். ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் யாழினி.
அதற்கு வெண்பா என்று அழகிய பெயர் சூட்டி இருவரும் மகிழ்ந்தனர்.

ஒரு மாலை வேலை. ஞாயிற்று கிழமை
வீட்டை  கூட்டி,பெருக்கி கொண்டிருக்கும் போது, வீட்டு வாசலில், யாழினியுடைய தந்தையும் , தாயும் ஒரு ஆட்டொவில் இருந்து இறங்கினர். அவர்கள் இருவரும் இவள் வீட்டை நோக்கி வர,
" அம்மா..யாழினி" இருவரும் கோரஸ்ஸாக
தன் மகளை பார்த்து தழு,தழுத்த குரல் எழுப்ப, நிமிர்ந்து பார்த்த யாழினி ஒரு நிமிடம் உறைந்து போனாள். பின் அவர்கள் உடல் மொழி புரிந்து கொண்டு
" அம்மா...அப்பா...அம்மா.. அப்பா.." ஆனந்த கண்ணீர் விட்ட வண்ணம் பாசம் பீரிட்டவளாய் அவர்களை கட்டி கொண்டு அழுதாள்.
" தோ பாருங்கப்பா உங்க பேத்திய"
கையில் வாங்கிய யாழினியின் அப்பா
" குழந்தை பெயர் என்னடா"
" வெண்பா அப்பா"
யாழினியின் அப்பா தன் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை கழட்டி குழந்தைக்கு அணிவித்தார். அப்பாவின் இந்த செயலால் பூரித்த தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர்.
" மாப்பிள்ளை, நம்ம ஏரியா எம்.எல்.ஏ கிட்ட உங்கள பத்தி சொன்னேன். இன்னும் ஒரு மாசத்தில எப்படயும் நம்ம ஊர் பக்கமே  உங்க படிப்புக்கு தகுந்தார் போல ஒரு நல்ல அரசாங்க வேலை வாங்கி தரேன்னு சொல்லி இருக்கார். உங்க சர்டிபிகேட் ஜிராக்ஸ் எல்லாம் என்கிட்ட கொடுங்க. நல்லதா இருக்கும்.

அம்மா, அப்பா வந்து போன சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆடினாள் யாழினி. மிஸ்டர் தமிழ்
" எங்கப்பாவே சொல்லிடாரு, இன்னும் ஒரு மாசத்துல அரசாங்க வேலை"
" கிடைச்சா ரொம்ப சந்தோஷம்"


அன்புள்ள யாழினிக்கு

மாப்பிள்ளை வேலை விஷயமாக, அவர் அவசரமாக நம்ம ஊருக்கு உடனே வர சொல்லவும்.
இப்படிக்கு
அன்பு அப்பா.

" வாங்க மாப்பிள்ளை, மன்னிக்கனும், MLA
அவசரமா உங்க வேலை விஷயமா கூப்பிட்டதால.. உங்கள அவசர..அவசரமா வரசோன்னேன்.."
" பராவில்லை மாமா, எல்லாம் நல்ல விஷயத்துக்கு தானே"
" கை கால் கழுவிட்டு வாங்க, சாப்பிடலாம்"

தடபுடலான சாப்பாடு, அருமையான விருந்து. ஆர்பாட்டமான உபசரிப்பு. மிகவும் மகிழ்ச்சியில் தமிழ்.

" சரி தலைவரே, சரியா ஏழு மணிக்கு உங்க வீட்டுக்கு நானும், என் மாபிள்ளையும் வந்திடரோம்".

மாப்பிள்ளை ஆறு மணிக்கு இங்கிருந்து MLA வீட்டுக்கு கிளம்பரோம், வேலைக்கான ஆர்டர் வாங்கறோம்.. என்ன..

கார் இருட்டை கிழித்து கொண்டு அதி வேகமாக  சென்றது. " டிரைவர், அந்த தோப்பு பக்கம் கொஞ்சம் வண்டி நிறுத்து, செடிக்கு தண்ணி அடிக்கனும். நீங்களும் வாங்க மாப்பிள்ளை. தமிழும் உடன் சென்றான்.
ரோட்டிலிருந்து இருநாறு அடி அப்பால் சென்று ஒரு மறைவில் தன் உடல் உபாதயை யாழிணியின் அப்பா கழிக்க,
தமிழும் ஒரு ஒதுக்கு புறமான மறைவில் அவன் பங்கிற்கு அவனும்.....

எதிர்பாராது விதமாக நான்கு குண்டர்கள்
தமிழின் பின்னே தோன்ற, அவர்கள் கையில் ஆயுதங்கங்கள் ஏதும் இல்லை.
ஆனால் அவர்கள் நான்கு பேரும் தமிழை மேல் காயம் படாமல் அடித்து துவைத்தனர்.
மயங்கிய தமிழை மின்சார வேலியில் போட்டனர். மின்சாரத்தால் தூக்கி வீசி எரியப்பட்டான் தமிழ். தமிழ் உயிர் நீத்தான்.

எல்லாம் முடிந்துவிட்டது. மின்சாரம் தாக்கி
தமிழ் இறந்ததாக யாழினி உட்பட எல்லோரும் நம்பினர்.

" யாழினி நீயும் குழந்தையும் நம்ம வீட்டுக்கு வந்திருங்க" யாழினி அப்பா அழைத்தார்.
" இல்லப்பா, தமிழ் குடும்பத்த இனி நான் காப்பாத்தனும், அவருடைய ஒரே தங்கையை நான் வேலை போய் சம்பாரிச்சு கரை சேர்க்கனும், அதனால நான் அவர் வீட்லேயே இருக்கிறது தான் எனக்கு நல்லதுன்னு படுது"
" சரி உன் இஷ்டம்"
ஒரு வருடம் மின்னல் என ஓடியது.
தமிழ் தங்கைக்கு ஒரு நல்ல வரன் அமைந்தது. ஏதொ அவள் காது, மூக்குக்கு போடும் அளவுக்கு யாழிணி அவளால் முடிந்த அளவுக்கு தனியார் ஆசியராக பணி புரிந்து சம்பாதித்தாள். தமிழின் தங்கையின் கல்யாணம் நல்ல படியாக முடிந்தது. இதற்கிடையே சென்னையில் யாழினிக்கு ஆசிரியர் பணிக்கு நல்ல சம்பளத்துடன் அழைப்பு வர, அவள் தமிழின் மீனவ நண்பனிடம் தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கி, ஒரு வீடு பார்க்க சொன்னாள். ஒரே வாரத்தில் அந்த மீனவ நண்பன் வீடு பார்க்க, சென்னை நோக்கி தன் குழந்தை வெண்பாவுடம் பயணிக்கும் முன், தன் தாய் தந்தையிடம் சொல்லி விடைபெற அவள் பிறந்த வீட்டை அடைந்தாள். அவள் தமிழுடன் சென்ற பிறகு பல நாட்கள் கழித்து அவள் வீட்டில் அவள் பாதம் பட போகிறது. வீட்டு வாசலில் எப்போதும் எரியும் விளக்கு எரியவில்லை.
அவள் அவளுடைய வீட்டின் கேட்டை தொட்டு திறக்க முற்பட்டவளுக்கு அந்த உரையாடல் பேரதிர்ச்சியை தந்தது.
" அந்த தமிழ் பைனை எப்படி போட்டமோ, அப்படியே என் வயத்தில பிறந்த அந்த யாழினி நாயையும், அவ குழந்தையையும் போட்டிருங்க"
" ஐயா, அவங்க உங்க பொண்ணு"
," அவ, எப்ப அந்த பையனோட ஓடினாலோ அப்பவே அவளை தலை முழுகிட்டோம்"
" ஐயா, தப்பு மேல தப்பு பண்றோம்"
" எனக்கு குலம்,ஜாதி தான் முக்கியம்.
ஜாதி தான் என் உயிர். அதுக்காக நான் உயிரை கூட விட தயார்"

உடல் நடுங்கிய யாழிணி, அந்த ஓநாய்களிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று
நாலு கால் பாய்சலில் அங்கிருந்து கமுக்கமாக ஓடி வந்தவள், தமிழ் குடும்பத்தாரை உடனே சென்னைக்கு தன்னுடன் வருமாறு அவளுடன் அழைத்து வந்துவிட்டாள்.
" உங்க கம்பளைண்ட் படித்தேன், தகவல் விழுப்புரம் போலீஸ்க்கு அனுப்பி, உண்மை என்னன்னு பார்க்கலாம், உங்களுக்கும், உங்க குடும்பதாருக்கும் எங்களால் முடிந்த பாதுகாப்பு போலீஸ் தரப்பில் இருந்து நிச்சயம்  வழங்கப்படும்"
" சார், குற்றவாளி எக்கப்பா தான் சார்"
" சரிம்மா.. நீ சொல்ர இதுக்கு சாட்சி வேனும்"
" அப்ப, குற்றவாளிக்கு தண்டனை இல்லையா"
" நிச்சயம் சட்டம் தன் கடமையை செய்யும்"
இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா?
சாதி என்ற சாக்கடை எப்போது ஒழியும்.
இந்த ஆணவ கொலைகள் எப்போது முடிவுக்கு வரும்.
நீதி நிலைநாட்டபடுமா...
???????


மின்சார வண்டி எக்மோர் வந்தடைய, பின்னோக்கி சென்ற நினைவுகளில் நீந்திய யாழிணி கண்களில் கண்ணீருடன் அவசரம், அவசரமாக வண்டியில் இருந்து இறங்கினாள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (18-Feb-21, 9:36 am)
சேர்த்தது : balu
பார்வை : 253

மேலே