உலகம்

உலகம்
சோமன் ஸ்ரீதரன்-( 09.03.2021)

மகளே.. நீ பிறந்ததும்
பஞ்சு பொதி எடையில்
பிஞ்சு கைத்தொடலில்
நெஞ்சிற் சாய்த்த நொடியில்
என் உலகம் பிறந்தது
உனை சுமந்தேன்
சுமைகள் மறந்தேன்
இமையானேன்

உன் வளர்வில்
நீ தவழ்கையில்
நடை பயில்கையில்
மழலை பேசுகையில்
என் உலகம் வளர்வுற்றது
கடிகை துறந்தேன்
காலம் தொலைத்தேன்
பொம்மையானேன்

நீ வளர்ந்ததும்
உன் தீரா அர்ப்பனிப்பில்
கற்றலின் மெய்வருத்தலில்
கனவு மெய்படுத்தலில்
என் உலகமும் வளர்ந்தது
விழி கசிந்தேன்
இமயம் தொட்டேன்
விசிறி ஆனேன்

நாளை
உன் இலட்சிய நோன்பில்
தலைமைப் பண்பில்
மனிதநேய மாண்பில்
உலகம் உனதாகும்
இதயம் பல தொடுவாய்
உலகம் காப்பாய்
இமையாய்

சோமன் ஸ்ரீதரன்
(மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக…)

எழுதியவர் : சோமன் ஸ்ரீதரன் (21-Mar-21, 2:59 pm)
சேர்த்தது : சோமன் ஸ்ரீதரன்
Tanglish : ulakam
பார்வை : 2915

மேலே