தேவர்கோன் தனக்குச் செங்கண் ஆயிரம் அளித்தோன் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மாயிரு விசும்பின் கங்கை
..மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகை யோடு
..மின்யென ஒதுங்கி நின்றாள்.
தீவினை நயந்து செய்த
..தேவர்கோன் தனக்குச் செங்கண்
ஆயிரம் அளித்தோன். பன்னி;
..அகலிகை ஆகும்’ என்றான்.. 72

- அகலிகைப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து கங்கா நதியை இப்பூமிக்கு கொண்டு வந்த பகீரதன் என்னும் பேரரசன் (குலத்தில் பிறந்த) மைந்தனே! பொருந்தின மகிழ்ச்சியோடு மின்னல்கொடிபோல ஒருபக்கத்தே (நாணத்தால்) ஒதுங்கி நின்ற இவள் (மற்றொருவன் மனைவியைச் சேர்தலாகிய) கொடுந்தொழிலை விரும்பிச் செய்த தேவர்கள் தலைவனான இந்திரனுக்கு சிவந்த ஆயிரம் கண்களைக் கொடுத்த கௌதம முனிவனுடைய பத்தினியான அகலிகை ஆவாள் என்றான்.

அகலிகை தன் சிலை வடிவம் நீங்கி, பெண்வடிவு பெற்று மகிழ்ச்சியோடு நாணத்தால் ஒதுங்கி நிற்பவளே கௌதம முனிவனின் மனைவியான அகலிகையாவாள்:

இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றமை:

இந்திரன் மாற்றான் மனைவியைச் சேர்தலாகிய கொடுஞ்செயலை விரும்பிச் செய்ய அதன் பொருட்டுக் கௌதம முனிவர் அவனுக்குச் சாபம் தந்தார். பின்னர் அம் முனிவரை வேண்டக் குறிகள் ஆயிரம் கண்களாகுமாறு அருள் பெற்றான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-21, 8:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

மேலே