அந்நியனும் - சட்டமும்

வஞ்சித்தாழிசை

வேற்றுநாட்டினரை நேசங்காட்டியே
ஏற்றுக்கொண்டதால் தேசத்திலே
கூற்றவனின் அழைப்பைப்போல்
மாற்றங்களால் வெகுதுன்பம்

நம்மிடம் வாங்கவந்தவன்
நம்மையே அடிமையாக்கி
நம்மாட்களால் நம்மினத்தை
வம்பெனவே அடித்துதைத்தான்

பயத்தினாலே பெருங்கூட்டம்
புயத்தினையே மார்போடுக்கட்டி
குயவஞ்சுற்றும் வட்டைப்போலே
சுயத்தினை இழந்துவாழ்ந்தனரே --- (1)

போராடியே உரிமையைமீட்டு
தோராயமாய் மக்களாட்சியை
நாரோடு புனையும்பூவாய்
போராடியே நாட்டையிணைத்தனர்

ஆயிரமாய் மொழியைப்பேசிய
தாயெனும் பாரதத்திற்கு
மாயமான பெயரினையிட்டு
காயத்தினை மறைத்தனரே

சட்டமென்ற ஒன்றினாலே
கட்டமைத்து அதைநடத்த
பட்டம்பெற வழிசெய்தனர்
சட்டங்கற்றோர் குற்றப்புள்ளியாய் --- (2)

உணர்வுகளும் உள்ளமும்
கிணறுள்ளே பெய்தமழையாய்
பணமுடையோரிடம் சட்டமயங்கியே
பிணமெனநீதி நேர்மைமாறியே

தனித்தனியான முடிவுகளைத்தந்திட
நனிமிகுச்சட்டம் ஒவ்வொருமன்றத்தில்
குனிவைத்தரும் தீர்ப்புகளை
கனியெனவே வெம்பியதைத்தந்தே

அரசிடம் கூலிவாங்கும்
உரமிகு நீதிமான்களால்
அரசுசெய்யும் தவறுகளை
கரம்முறுக்கி எதிர்ப்பாரோ --- (3)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Nov-21, 10:28 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 29

மேலே