ஒற்றாள் எனப்படு வார் மூவர் – திரிகடுகம் 55
இன்னிசை வெண்பா
அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள் எனப்படு வார் 55
– திரிகடுகம்
பொருளுரை:
பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடாத மறைமொழியைக் காப்பாற்றாத நட்பாளனும்,
பெருமைக் குணத்தை விரும்பாமல் தலைவன் குறைகளை வெளிப்படுத்தி தருமத்தினின்றும் நீங்கிய பெண்ணும்,
எங்காயினும் கோபங் கொண்டு தலைவன்மேல் குற்றங் கூறுகின்ற குற்றேவல் புரிவானும் ஆகிய இம்மூவரும் ஒற்றர்களை ஒப்பரென்று சொல்லப்படுவார்.
கருத்துரை:
ஒருவன் மறைமொழியை வெளிப்படுத்தும் நண்பனும், உள்ள பெருமையும் ஒழிக்கக் கருதும் பெண்ணும், தலைவரிடம் பகை பாராட்டும் வேலையாளனும் ஒற்றரை ஒத்தவர் எனப்பட்டது.
அருமறை - அருமை மறை. அருமை - சொல்லக்கூடாமை. மறை - மறைக்கப்படுவது;
பெருமை - ஒரு பெண்ணுக்குக் கற்பால் உண்டாகும் பெருமை.
அறத்தின் நீங்கிய பெண் உருவில் மட்டும் பெண்ணே என்பார் பெண்பால் என்றார்.
யாண்டு என்பது தன் தலைவனுக்குப் பகைவர் அயலார் நட்பினராகிய இடம்.
ஆடுதல் - பேசுதல். ஒற்று – துறந்தார் முதலிய மாற்றுருக் கொண்டு பகைவரிடஞ் சென்று ஒன்றுபட்டு அங்கு நடப்பனவற்றை ‘அறிந்துவந்து உரைப்பவர்.