ஒற்றாள் எனப்படு வார் மூவர் – திரிகடுகம் 55

இன்னிசை வெண்பா

அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள் எனப்படு வார் 55

– திரிகடுகம்

பொருளுரை:

பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடாத மறைமொழியைக் காப்பாற்றாத நட்பாளனும்,

பெருமைக் குணத்தை விரும்பாமல் தலைவன் குறைகளை வெளிப்படுத்தி தருமத்தினின்றும் நீங்கிய பெண்ணும்,

எங்காயினும் கோபங் கொண்டு தலைவன்மேல் குற்றங் கூறுகின்ற குற்றேவல் புரிவானும் ஆகிய இம்மூவரும் ஒற்றர்களை ஒப்பரென்று சொல்லப்படுவார்.

கருத்துரை:

ஒருவன் மறைமொழியை வெளிப்படுத்தும் நண்பனும், உள்ள பெருமையும் ஒழிக்கக் கருதும் பெண்ணும், தலைவரிடம் பகை பாராட்டும் வேலையாளனும் ஒற்றரை ஒத்தவர் எனப்பட்டது.

அருமறை - அருமை மறை. அருமை - சொல்லக்கூடாமை. மறை - மறைக்கப்படுவது;

பெருமை - ஒரு பெண்ணுக்குக் கற்பால் உண்டாகும் பெருமை.

அறத்தின் நீங்கிய பெண் உருவில் மட்டும் பெண்ணே என்பார் பெண்பால் என்றார்.

யாண்டு என்பது தன் தலைவனுக்குப் பகைவர் அயலார் நட்பினராகிய இடம்.

ஆடுதல் - பேசுதல். ஒற்று – துறந்தார் முதலிய மாற்றுருக் கொண்டு பகைவரிடஞ் சென்று ஒன்றுபட்டு அங்கு நடப்பனவற்றை ‘அறிந்துவந்து உரைப்பவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 6:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே