தந்தையும் தாயும் வழிபட்டு வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தல் - திரிகடுகம் 56
நேரிசை வெண்பா
முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும்
விழுப்ப நெறிதூரா வாறு 56
- திரிகடுகம்
பொருளுரை:
முன்னதாகிய இளமைப் பருவத்தில் கல்வியறிவு உண்டாதலும், அதன்பின்பு கல்விப் பொருள் உணர்ந்து தந்தையையும் தாயையும் போற்றிவந்த ஒழுக்கமும், பெரியோரது வழியைச் சேர்தலும் ஆகிய இம்மூன்றும் உயர்வாகிய நெறியைத் தூர்க்காத வழியாம்.
கருத்துரை:
இளமையில் கல்வி கற்றுப், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றிச், சான்றோர் செல்லும் நெறியிற் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம்.
முந்தை: இஃது இளமையின் மேல் நின்றது; விழுப்ப நெறி - விழுப்பத்தையுடைய நெறி