குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் – நாலடியார் 143
இன்னிசை வெண்பா
இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ(டு)
ஒன்றா வுணரற்பாற் றன்று. 143
– நாலடியார்
பொருளுரை:
பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும், சற்று எதிர் சென்று வரவேற்றலும்,
அவர் பிரியும்போது சற்றுப் பின்சென்று அவர்க்கு விடை தந்ததன் பின் பிரிந்து வருதலுமாகிய இத்தகைய பணிவுக் குணங்களை உயர்குடிப் பிறந்தார் குறைவுபடாத நல்லொழுக்கமாக மேற்கொண்டொழுகுவர்;
இத்தகுதி, கீழ்மைக்குணம் கொண்டோரிடம் மக்களாற் சிறந்ததொன்றாக உணர்ந்து கொள்ளுதற்கு உரியதன்று.
கருத்து:
உயர்குடிப் பிறந்தாரே பணிவின் உயர்வை அறிந்து கொள்ளுந் தகுதியுடையர்.