துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப்படும் - நீதிநெறி விளக்கம் 52
நேரிசை வெண்பா
காலம் அறிந்தாங்(கு) இடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்(து)
ஆள்வினை ஆளப் படும். 52
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
ஒரு காரியத்தைச் செய்தற்குரிய காலத்தினை அறிந்து, அக்காரியத்தைச் செய்து முடித்தற்கேற்ற இடத்தினையும் அறிந்து, செய்யும் அக்காரியத்தின் காரணத்தையும் அறிந்து, அதைச் செய்து முடித்த பின் அதனாலேற்படும் பயனையும் அறிந்து பின்னும் ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து அக்காரியம் செய்து முடித்தற்குத் துணை செய்ய இருப்போர் வலிமையுந் தெரிந்துகொண்டு பின்னர் செய்யும் செயலின் முயற்சி செய்யப்படும்.
விளக்கம்:
மக்கள் யாவர்க்கும் இந்நீதி பொருந்துமேனும் போர்த்தொழில் புரியும் அரசர்க்கு முதன்மையானதாகும்.
காலமறிதல் - தமக்கும் பகைவர்க்கும் ஆகும் காலம், ஆகாத காலம் இரண்டையும் அறிதல்.
தமக்கு ஆகுங் காலம் – படைச்செலவுக்குப் போதிய பொருள் இருக்குங் காலம் முதலியன.
இடமறிதல் – தமக்கும் பகைவருக்கும் வெல்லுதற்குத் தக்க இடமும், தகாத இடமும் அறிதல்.
வினையின் மூலம் அறிதலாவது, போர் செய்யப் புறப்படுங் காரணம் நன்றோ தீதோ என்று அறிதல்;
விளைவு, அதன் பயனையெல்லாம் அறிதல்,
மேலும் சூழ்வன சூழ்தலாவது - போர் செய்யுங்கால் நிகழுமென நினைக்கும் இடுக்கண்களையும், அவ்விடுக்கண்களைக் களையும் வழிகளையும் ஆராய்தல்,
துணையறிதல் - துணையரசர்கள் தன்மையையும் தொழிலுக்கு வேண்டிய காரணங்களாகிய தேர், யானை, குதிரை, காலாட்படை இவற்றின் வலிமையையும் படைத்தலைவர் முதலியோர் திறமையையும், படைக்கு வேண்டிய உணவுப் பொருள் நிலைமையையும் அறிதல்.
"இடத்தொடு பொழுது நாடிச் செய்வினைக் கண்ணும் அஞ்சார்" என்னும் சிந்தாமணியும்,
"பகல் வெல்லுங் கூகையைக் காக்கை இகல் வெல்லும்,
வேந்தர்க்கு வேண்டும் பொழுது"
என்னுந் திருக்குறளும் நினைவு கூரற்பாலன.
கருத்து:
கருதிய தொழிலை முடிக்கக் காலம் இடம் துணை முதலியன இன்றியமையாதன.