ஈயாத செல்வர் உலகினரால் பழிக்கப்படுவர் - நீதிநெறி விளக்கம் 67

இன்னிசை வெண்பா

வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான். 67. - நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

ஈயும் குணமில்லாதானது செல்வத்தைவிட, ஈயுங் குணமுடையவனுடைய வறுமையே மிகவும் நல்லன;

ஏனெனில், அவ்வறியவன் உயிர்களிடம் கருணையில்லாதவன் என்றும், அன்பில்லாதவன் என்றும், கண்ணோட்டம் இல்லாதவன் என்றும் பலராலும் வீணில் பழிக்கப்பட மாட்டான்.

விளக்கம்:

'ஈயாத செல்வர் இருந்தென்ன போயென்ன' எனும் இழிவுமொழி இங்கு நோக்கத் தக்கது.

கண் அறையன் - கண்ணோட்டம் அற்றவன், கொடையில்லாதவன்.

இகழப்படுவான் என்பதனாற் கொடையாளி புகழப்படுவான்
எனஉய்த்துணர வைப்பது மாறுபடு புகழ் நிலையணி.

கருத்து:

ஈயாத செல்வர் உலகினரால் பழிக்கப்படுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Mar-22, 11:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே