ஈயாத செல்வர் உலகினரால் பழிக்கப்படுவர் - நீதிநெறி விளக்கம் 67
இன்னிசை வெண்பா
வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான். 67. - நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
ஈயும் குணமில்லாதானது செல்வத்தைவிட, ஈயுங் குணமுடையவனுடைய வறுமையே மிகவும் நல்லன;
ஏனெனில், அவ்வறியவன் உயிர்களிடம் கருணையில்லாதவன் என்றும், அன்பில்லாதவன் என்றும், கண்ணோட்டம் இல்லாதவன் என்றும் பலராலும் வீணில் பழிக்கப்பட மாட்டான்.
விளக்கம்:
'ஈயாத செல்வர் இருந்தென்ன போயென்ன' எனும் இழிவுமொழி இங்கு நோக்கத் தக்கது.
கண் அறையன் - கண்ணோட்டம் அற்றவன், கொடையில்லாதவன்.
இகழப்படுவான் என்பதனாற் கொடையாளி புகழப்படுவான்
எனஉய்த்துணர வைப்பது மாறுபடு புகழ் நிலையணி.
கருத்து:
ஈயாத செல்வர் உலகினரால் பழிக்கப்படுவர்.