தூற்றின்கண் தூவிய வித்து மூன்று – திரிகடுகம் 80

நேரிசை வெண்பா

முறைசெய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும், - நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து 80

- திரிகடுகம்

பொருளுரை:

முறையறிந்து செய்யமாட்டாதவன் அடைந்த தலைமைத் தன்மையும், மனத்தில் உறுதிப்பாடு இல்லாதவன் மேற்கொண்ட தவமும், குறைவற்ற நிறைவான ஒழுக்கத்தைத் தெளிந்து நடவாதவன் பெற்ற அழகும் ஆகிய இம் மூன்றும் புதரில் விதைத்த விதையை யொக்கும்.

கருத்துரை: முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அழகும் வீண் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-22, 2:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1700

மேலே