என் நண்பனே
நண்பா !
எப்போது
அறை மாறினாய்
என் இதய வீட்டில் நீ !
உன் அதே கண்கள்,
பேசும் மொழி வேறாய் !
எப்போதும் பேசும்
வார்த்தைகள் தான்,
இப்போது அர்த்தம் மாறி
ஒலிக்கிறதே!
தோள் மீது கை போட்டுத்
திரியும் போதும்
வராத உணர்வு,
உன் சிறு விரல் தீண்டலில்
தற்போது !
தவிப்புகள்
தலை தூக்க
தவிர்க்கிறேன் உன்னை !
குழப்பங்கள்
பித்தாக்கி, மெதுவாய்
இழக்கிறேன் என்னை !
பழைய உன்னிடம்
மறைக்க என்னிடம்
ஏதும் இருந்ததில்லை !
ஆனால் இப்போது,
பேச வந்து மௌனமாய்,
ஆசைகளை வெட்கமாய்
உதிர்க்கிறேன் !
உன் மொக்கை
ஜோக்கிர்க்கும்
சிரித்தே வைக்கிறேன் !
அர்த்தமில்லா
வார்த்தைகள்
ஆயிரம் பேசினோம் !
மௌனத்திற்கு
அகராதி
எழுதிப் படிக்கிறேன்!
என் கடைசி காட்சி
உன் மடியில் உன் முகம் பார்த்து
தீர வேண்டுமாய்
தோன்றுதடா ! ஏன்?
நீ தொலைவே போன
நாட்களில் தான்
இந்த மாற்றம் வந்து
தொலைத்தது !
என் எவனோ ஒருவன்
உன் உருவில் இங்கே !
என் நண்பன் எங்கே ?
- நா முரளிதரன்