இருளுலகம் சேராத ஆறு மூன்று – திரிகடுகம் 90

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சே’ர்’தற்குச் செய்க பெருநூலை - யாதும்
அருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருளுலகம் சேராத ஆறு. 90

- திரிகடுகம்

பொருளுரை:

செல்வத்தை பிறருக்குக் கொடுக்கும் பொருட்டுத் தேடக்கடவன்; அறத்தின் வழியில் சேரும் பொருட்டு பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; எத்தன்மைத்தாகிய சொல்லையும் அருளை விரும்பிச் சொல்லக் கடவன் ஆகிய இம் மூன்றும் நகர உலகைச் சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம்.

கருத்துரை:

அறஞ் செயற்காகப் பொருளையும், அறநெறியில் ஒழுகுவதற்காகப் படிப்பையும், அருள் விளங்கும்படி பேச்சையும் ஒருவர் கொள்ளவேண்டுமென்பது.

நூலைச் செயல் என்பது இங்குத் தகுதியால் கற்பதன்மேற் கூறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-22, 6:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே