யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகையவர் – நாலடியார் 198

நேரிசை வெண்பா

ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர் 198

- தாளாண்மை, நாலடியார்

பொருளுரை:

யானையினது புள்ளிகளையுடைய முகத்தைப் புண்படுத்த வல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலிய கால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சி வலிமையுடையோர் நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாது தங்கி வருவாயின்றி இறக்க நேரினும்,

குற்றம் உண்டாகக் கூடிய செயல்களைச் செய்வார்களோ? செய்ய மாட்டார்கள்!

கருத்து:

முயற்சியுடையார்க்கு எந்நிலையிலும் பழிப்புக்குரிய தீச்செயல்கள் செய்யும்படி நேராது.

விளக்கம்:

மதுகை – முயற்சி, வலிமை.

‘வள்ளுகிர் நோன்றாள்' என்னும் உவமைக்கேற்பப் பொருளிற் கூரறிவும் தக்க செயல் வாய்ப்புமுடைய மதுகையவர் எனவும், பொருளில் ‘இல்லிருந்து இன்றி விளியினும்' என்றதற்கு ஏற்ப உவமையிற் குகையில் தங்கி உணவின்றி இறக்கினும் எனவும் உரைத்துக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-22, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே