உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை – நாலடியார் 199

இன்னிசை வெண்பா

தீங்கரும்(பு) ஈன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்(கு) - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை 199

- தாளாண்மை, நாலடியார்

பொருளுரை:

இனிப்பாகிய கருப்பங் கழியிலிருந்து தோன்றிய திரண்ட தாளையுடைய பிடரிமயிர் போன்ற மலர் தேனோடு கூடி மணக்கும் நறுமணத்தை இழந்தாற்போல்,

தன்புகழைச் சான்றோர் எழுதி நிலைநிறுத்துதற்குரிய அரிய முயற்சித்திறம் இல்லாவிட்டால் மிக்க உயர்குடியுட் பிறத்தலால்.மட்டும் யாது பயனுண்டு?

கருத்து: அரிய முயற்சித்திறம் இல்லாதபோது உயர் குடிப் பிறப்பும் இனிய தோற்றமும் இருத்தலால் மட்டும் பயனில்லை.

விளக்கம்:

உளையென்றது ஈண்டுக் குதிரை சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர் போல் மென்மையும் செறிவுமுடைய குஞ்சம்; இதனாற் சாயலுடைய தோற்றம் பெறப்பட்டது!

அலரி "முல்லை அரும்பவிழ்அலரி"1 என்புழிப் போலப் பொதுவாக மலரென்னும் பொருட்டு,

‘தேங்கமழ் நாற்றம்' என்பதில் தேன் பெயர்க்கும் நாற்றம் ஆண்மைக்கும் ஒக்கும்.

‘கரும்பு ஈன்ற' என்றார், உயர்குடியுட் பிறந்தும் என்றற்கு.

‘நாற்றம் இழந்தாங்கு ஆண்மையிலாக்கடை' யென்க;

பொறித்தல், நூலிலுங் கல்லிலுமாம்!.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-22, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே