பேதையர் நல்லாற்றில் நூக்கிற் குலைகுலைப எவ்வாற்றான் உய்வார் இவர் - நீதிநெறி விளக்கம் 90

நேரிசை வெண்பா
(’ல்’ ‘வ்’ இடையின எதுகை)

பரபரப்பி னோடே பலபல செய்தாங்(கு)
இரவுபகல் பாழுக்(கு) இறைப்ப - ஒருவாற்றான்
நல்லாற்றில் நூக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான் உய்வார் இவர் 90

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

உலகினர் பல காரியங்களை விரைவாகச் செய்து இரவையும் பகலையும் வீணிற் கழிப்பர்,

ஒரு வகையால், நல்லொழுக்க வழியில் (அறிவுடையோர் அவர்களைச்) செலுத்தினால் மெய் பதறி நடு நடுங்குவார்கள்;

இத்தகைய இவர்கள் (பிறவிப் பெருங்கடலினின்றும்) எந்த வழியாகத் தப்பிப் பிழைப்பார்கள்?

விளக்கம்:

நற்பயன் பெறுதற்குரிய தம் மனம் வாக்குக் காயங்களை உலகினர் இடையறாமற் கீழ்மையான செயல்களிற் பயன்படுத்தி அழிதலின், 'இரவு பகல் பாழுக்கிறைப்ப' எனவும்,

அவ்வாறு பாழ்படுவாரை அறிஞர் நன்னெறிக்குத் திருப்ப முயன்றால் அவர்கள், மனம் அதனை விரும்பாமையின் 'பதறிக் குலை குலைப' எனவுங் கூறினர்.

கருத்து:

உலகினர்தம் வாணாளை வீண் முயற்சிகளிற் கழிப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-22, 11:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே