நற்புடையிலாளர் தொழில் யாவை – திரிகடுகம் 97
நேரிசை வெண்பா
(’ங்’ ‘ஞ்’ மெல்லின எதுகை)
ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில். 97
- திரிகடுகம்
பொருளுரை:
அரசன், ஆசிரியன், தந்தை, தாய், மூத்த சகோதரன் ஆகிய ஐந்து பெரியோர்களுடைய கட்டளையை மறுத்து நடத்தலும்;
விரும்பிய குறையாமல் வளர்கின்ற நட்புச் செய்வாரிடத்து பொய் பேசி வழக்காடுதலும்;
தன்னை மனத்தில் இருத்தி விரும்பிய கற்புடைய மனைவியைத் துறத்தலும் ஆகிய இம் மூன்றும் நற்பண்பில்லாதவரது செயல்களாகும்.
கருத்துரை:
ஐங்குரவர் ஆணைப்படி நடவாமையும், நண்பனிடத்துப் பொய் சொல்லுதலும், கற்புடை மனைவியைத் துறத்தலும் பாவச் செய்கைகள் ஆகும்.