இவர்மூவர் பெய்யெனப் பெய்யும் மழை - திரிகடுகம் 96

இன்னிசை வெண்பா

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய்வகை செய்வான் தவசி; கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை 96

- திரிகடுகம்

பொருளுரை:

கொண்ட கணவனுடைய குறிப்பறிந்து நடக்கின்றவள் மனைவியாவாள்;

தான் மேற்கொண்ட விரதங்களை செய்யும் முறைப்படி செய்பவன் தவசியாவன்;

தீங்கினை நீக்கி குடிகளுக்கு நன்மையானவற்றை செய்பவன் அரசனாவான்;

ஆகிய இவர் மூவரும் மழையைப் பெய் என்றுசொல்ல மழை பொழியும்.

கருத்துரை:

குறிப்பறிந்து நடக்கும் பெண்டாட்டியும் நோன்புகளை முறைப்படி நடத்துகிற தவசியும், குடிகளுக்குத் தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசனும் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும்.

பெண்டு ஆட்டி - பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள்,

தவசி செய்கையாவன: மனம் பொறிவழியிற் போகாமல் நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்குதல், மழை பனி நீர் நிலை வெயில் இவற்றில் நிற்றல் முதலியவைகளை மேற்கொண்டு, அவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-22, 5:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே