இவர்மூவர் பெய்யெனப் பெய்யும் மழை - திரிகடுகம் 96
இன்னிசை வெண்பா
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய்வகை செய்வான் தவசி; கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை 96
- திரிகடுகம்
பொருளுரை:
கொண்ட கணவனுடைய குறிப்பறிந்து நடக்கின்றவள் மனைவியாவாள்;
தான் மேற்கொண்ட விரதங்களை செய்யும் முறைப்படி செய்பவன் தவசியாவன்;
தீங்கினை நீக்கி குடிகளுக்கு நன்மையானவற்றை செய்பவன் அரசனாவான்;
ஆகிய இவர் மூவரும் மழையைப் பெய் என்றுசொல்ல மழை பொழியும்.
கருத்துரை:
குறிப்பறிந்து நடக்கும் பெண்டாட்டியும் நோன்புகளை முறைப்படி நடத்துகிற தவசியும், குடிகளுக்குத் தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசனும் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும்.
பெண்டு ஆட்டி - பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள்,
தவசி செய்கையாவன: மனம் பொறிவழியிற் போகாமல் நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்குதல், மழை பனி நீர் நிலை வெயில் இவற்றில் நிற்றல் முதலியவைகளை மேற்கொண்டு, அவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல்.