நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை கஞ்சுகம் அன்று பிறிதொன்றே - நீதிநெறி விளக்கம் 93

நேரிசை வெண்பா

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுகம் அன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா(து) இது 93

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தமது மனம் புறத்திலே (கட்டுப்படாமல்) செல்ல, துறந்தவர்களுடைய தவக்கோலமாகிய போர்வை சட்டையைப் போன்றதும் ஆகாது; ஏனெனில், சட்டையானது எல்லாம் புலன்களையும் காக்காவிடினும் உடம்பாகிய புலனை மட்டுமாவது (பனி குளிர் முதலியவற்றினின்று) காக்கும்;

ஆனால், இந்தப் பொய்த்தவப் போர்வையானது இந்த உடம்பையும் (குளிர், பனி முதலியவற்றினின்று) காக்க மாட்டாது; ஆதலால், இப்பொய்த் தவக்கோலம் வேறு ஒரு பொருளே.

விளக்கம்:

மனத்தைப் புறஞ் செல்லவிட்டு மேலுக்கு மட்டும் துறந்தார் போல நடிப்பாரது துறவுகோலத்திற்கு ஓர் எளிய சட்டைக்கு இருக்கும் பெருமை கூடக் கிடையாது என்றார்.

சட்டையாவது குளிரினின்று காக்கும்; இப்பொய்த்தவப் போர்வையோ அதுவும் செய்யாது; ஆகையால் இது வேறொரு பொருளே.

துறந்தார் என்போர் எல்லாப் பற்றையும் அறவே நீத்தாராகையால் அவர்கள் மனம் ஒன்றிலும் பற்றுதல் கூடாது, ஏதாவது ஒரு காரியம் விரும்பிப் போகிறவன், அதற்குத் தகுதியான சட்டையணிந்து செல்லுதல் போல, மனமடக்காது கருத்திலே கரவு கொண்டாரது தவக்கோலமும் தீச்செயல் புரிதற்கென்று அணியப்படுவது போல் தோன்றலால், அது போர்வை என்றும் ஆனால் போர்வை போல் அது பயன்படாமையால் போர்வையுமன்று பிறிதொரு பொருள் என்றுங் கூறினார்.

கருத்து:

மனத்தைக் கட்டுப்படுத்தாத துறவிகளின் தவக்கோலத்தால் யாதும் பயனில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-22, 7:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே