வழிகாட்டி
எண்ணத்தைச்
செயலாக்கும்
எண்ணம் வேண்டும் !
முயற்சியிலே நல்ல
திண்ணம் வேண்டும் !
பின்னரே
வெற்றிச் சின்னம்
ஒருவனை வேண்டும் !
ஆப்பிள் விழுவதை
நியூட்டன் மட்டுமா
பார்த்தார் !
இல்லைதானே !
ஆயிரம் பாரதிகள்
பிறந்திருக்கலாம்,
வீட்டுக்குக் கவி இசைத்து
யாருக்கென்ன லாபம்,
பற்றி எரியும்
நாட்டுக்கு எடுத்துரைத்து
மகாகவி ஆனது ஒருவர் தானே !
வாழ்வின் நெறி
காட்டிய புத்தர்
அஹிம்சை வழி
காட்டிய காந்தி !
அறமும், பொருளும்,
இன்பமும் யாதென
உலகறியச் செய்த
வள்ளுவர் !
அண்ணலும்
அண்ணாவும்
இன்று வரை
நிற்பது எதனால்?
பாதைக்கு
வெளிச்சம் போடும்
விளக்கு,
கூடவே கூட்டிச்
சென்றடையும்
இலக்கு !
இவைதான் பேசும்
ஒருவனின் சிறப்பு !
முயன்று பார்
வழிகள் திறக்கும் !
செய்து பார்
வெற்றிகள் பிறக்கும் !
வழி காட்டிப் பார்
பாரிலே உன் பேர் சிறக்கும் !
- நா முரளிதரன்