உண்மைகள் 2
வலக்கரமாக இருந்தவர்
இளக்காரமாகிப் போவது
இல்லாத பணத்தால் தானே !
சூடேறிய மணலை
கட்டித் தழுவி முத்தமிடும்
கடலோர அலைகள்
இந்நாளொரு பொன்நாளென
எந்நாளும் சொன்னாலென்ன
குறைந்தா போகும் மனிதநேயம்
காக்காமல் கைவிட்டால்
கரை சேருமா?—இல்லை
கறை படுமா?
இரைப்பை என்றும்
அரைப்பையா யிருந்தால்
உயிர்ப்பை நீட்டலாமே !
நெஞ்சைக் கலங்கவைத்து
வஞ்சித்து போனவளால்
மிஞ்சும் வாழ்க்கை எஞ்சுமா ?
பசிக்குக் காசு கேட்டேன்
போடாது போனவர்கள்
புதை இடத்தில் போடுகிறார்களே !
கருங்குயில் பாட
கோல மயிலாட—காணும்
கருமேகம் ஆர்ப்பரிக்குதோ !