இருபதில் கேள்வியற்ற பதில்கள் அறுபதில் பதில் அற்ற கேள்விகள்

ஆறு மாதத்தில் ஆறடி நடக்க அறுபது முறை விழுந்து சிரித்து எழுந்தேன்
அறுபது வயதில் அறுபதடி நடக்க ஆறு முறை தடுமாறி தள்ளாடுகிறேன்
இருபதில், படித்ததை புரியாமல் முடித்து பறக்காத ஒரு பட்டம் பெற்றேன்
அறுபதில்,புரிந்தும் புரியாத உத்தியோகத்தை முடித்து ஓய்வும் பெற்றேன்
இருபதில் இருபது இளம்பெண்களை காணாமல் கண்டு மனதில் ரசித்தேன்
அறுபதில்,அருகில் இருப்பதையும் ரசிக்கமுடியாமல் உடல் வியர்க்கிறேன்
இருபதில்,பிறர் சொற்களை ஒரு காதில் வாங்கி இன்னொன்றில் விட்டேன்
அறுபதில் பிறர் பேசுவதை கேட்க நினைத்தும் பாதி டமரமாக இருக்கிறேன்
இருபதில்,இருநூறு அடிதூரத்தில் நடந்த கன்னிகளை வலைவீசிய கண்கள்
அறுபதில், இருபதடியில் உள்ள பாட்டியை கன்னியாக காணும் 1.5 கண்கள்
இருபதில் வாய் தொண்டை இருந்தும்,கூச்சத்தால் மௌனமிருந்த நாட்கள்
அறுபதில்,தொண்டை வலியினால் அதிகம் பேசமுடியாத பல சந்தர்பங்கள்
இருபதில் மனப்பாடம் செய்து படித்ததால் படித்ததை மறந்து விடும் மூளை
அறுபதில், மனதில் ஓடும் படம், என்னவென்று புரியாத இறந்த கால சூளை
இருபதில் இளைஞனாக, வீதியில் செல்லும் கன்னிகளை கண்டு,பட்ட பாடு
அறுபதில், எங்கிருந்தோ உதிக்கும் திடீர் எண்ணங்களுடன் தினம் ஒரு பாடு
இருபதில் ஏன் பிறந்தோம் எனும் எண்ணம் இம்மியளவும் மனதில் இல்லை
அறுபதில், ஏன் இவ்வுலகில் பிறந்து வாழ்கிறோம் என்று புரியவும் இல்லை!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Jun-22, 4:46 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 48

மேலே