பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால் மருந்து மறப்பதோ மாண்பு – அறநெறிச்சாரம் 118
நேரிசை வெண்பா
(‘ப்’ ‘க்’ வல்லின எதுகை)
மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலமிலவாய் – நோக்கீர்;
பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு? 118
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
மூப்பு நோய் மனைவி மக்களைப் பிரிதல் வறுமை மரணம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும் பொய்யின்றி மெய்யாக ஆராயமாட்டீர்,
கழுகுகளுக்கு இரை ஆகிய இவ்வுடலைப் பெற்றால் இனி உடலையடையாவாறு தடுக்கும் மருந்தாகிய தவத்தினை மறப்பது பெருமையாகுமோ? ஆகாது.
குறிப்பு:
''பருந்துக் கிரையா மிவ் யாக்கையைப் பெற்றால், நோக்கீர், மறப்பதோ மாண்பு'' எனக் கூட்டிப் பொருள் காணலுமாம். யாக்கை - உடல்: