நயமுணர்வார் நண்பொரீஇப் புல்லறிவி னாரொடு நட்பு – நாலடியார் 239
நேரிசை வெண்பா
(’ன்’ ‘ம்’ மெல்லின எதுகை)
ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ; - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு 239
- கூடாநட்பு, நாலடியார்
பொருளுரை:
தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!
இனியதறியும் பேரறிஞரது நண்பினின்றும் நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பு,
ஆனிடத்தில் உண்டாகும் நெய்யைப் பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கி வேம்பின் விதையைக் காய்ச்சியெடுத்த வேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற் போன்ற தன்மையதாகும்.
கருத்து:
இனிதறியாத புல்லறிவினாரான கூடா நட்பினருடன் நேயஞ் செய்தலாகாது.
விளக்கம்: நயமுணர்வார் என்றார், இனியராய் ஒழுகும் இயல்பறிவார் என்றற்கு; சிற்றறிவினார்க்கு அத்திறம் வாயாமையின் புல்லறிவினார் என்று விதந்தார்.