சுனாமியின் மகன் பெனாமி

சுருடு: போன வருஷம் பார்த்தப்போ இந்த இடத்தில, டைட்டானிக் கப்பல் போல உனக்கு ஒரு பெரிய வீடு இருந்ததே. இப்போ பார்த்தா, கப்பல் இருந்த இடத்தில ஒரு சின்ன குத்துக்கல் தான் தெரியுது.
புருடு: அதை ஏன் கேக்கறே சுருடு. மூணு மாசத்துக்கு முன்னாடி இங்கே ஒரு பெனாமி காத்து அடிச்சது.
சுருடு: அது என்னப்பா பெனாமி காத்து. சுனாமி காத்துன்னு சொல்லு.
புருடு: இல்லப்பா. அது சுனாமி இல்ல, பெனாமி காத்துதான். முதல் தடவை சுனாமி வந்துட்டு திரும்பறப்போ, அதோட சின்ன குழந்தையை மறந்துபோய் இங்கேயே விட்டுட்டு போயிடிச்சாம்.
சுருடு: இது என்னப்பா, புரியாத புதிராக இருக்கு. இவ்வளவு நாள் அந்த பெனாமி குழந்தை எங்கு இருந்ததாம்?
புருடு: என்னுடைய டைட்டானிக் கப்பல் வீட்டின் அடியிலதான் வசித்து வந்ததாம்.
சுருடு: அடப்பாவமே. நீ இருந்த வீடே ஒரு பெனாமிதானா?
புருடு: ஆமாம் கண்ணு.
சுருடு: அது சரி. பெனாமி குழந்தை உன் வீட்டிற்கு கீழேயிருந்து எப்படி வெளியே வந்தது?
புருடு: ஒரு நாள் இரவு, தூக்கத்துல நான் எங்கேயோ மேலே மிதந்து போவதுபோல இருந்தது. திடீர்னு கண்ணு முழித்து பார்த்தா, மெய்யாலுமே என் வீடு நூறு அடிக்கு மேலே மிதந்து கொண்டிருந்தது. அப்படீன்னா நானும்தானே நூறு அடிக்கு மேலே மிதந்தேன்?
சுருடு: சரியாத்தான் சொன்னே. சரி உன் டைட்டானிக் கப்பல் மட்டும் காணாமல் போயிடுச்சு. நீ எப்படி பொழைச்சே?
புருடு: அந்த கூத்தை ஏன்பா கேக்கறே. அது கனவா அல்லது நனவான்னு தெரியல. என் கட்டில் அடியிலிருந்து ஒரு குரல் கேட்டது. "புருடு. எங்க அப்பா என்னை இங்கே அம்போன்னு உட்டுட்டு போயிட்டாரு. இப்போ எனக்கு பத்து வயசு. இன்னிக்கு காலைலதான் எங்க அப்பா எனக்கு அனுப்பிச்ச வாய்ஸ் மெசேஜ் கிடைச்சுது. அதுல அவர் "என் அருமை பெனாமி செல்வமே. நான்தான் சுனாமி, உங்கப்பா. நான் அட்லாண்டிக் கடலிலிருக்கிறேன். நீ எங்கேயோ ரொம்ப தூரத்தில இருக்கிறாய். நீ என்னிடம் வருவதற்கு ஒரு வழி சொல்கிறேன்”.
சுருடு: இதையெல்லாம் எப்படிப்பா நம்புவது?
புருடு: என் வீடே இங்கே காணோம். அதை நம்பமுடியுதில்ல. அப்புறம் இதையும் நம்பித்தான் ஆகணும். சுனாமி பெனாமிக்கு சொன்ன யோசனை இதுதான் "பெனாமி, நீ ஒரு பெரிய வீட்டின் பூமியின் கீழே இருக்கிறாய். “நான் பெனாமி, என் அப்பா சுனாமி” அப்படீன்னு ஆறு முறை அலறினால், நீ உனக்கு மேலேயிருக்கும் வீட்டின் உள்ளே புகுந்திடலாம். அங்கு வந்த பிறகு "என் அப்பா பெரிய சுனாமி, நான் சிறிய சுனாமி" அப்படீன்னு பத்து முறை அலறவேண்டும். அந்த வீட்டில் எந்த மனிதரும் இருக்கக்கூடாது. ஒருவேளை இருந்தால் அவரை பூமியிலேயே விட்டுவிடவேண்டும்."
சுருடு: நீதான் நூறு அடி மேலே போய்ட்டியே, அப்புறம் எப்படி கீழே இறங்கினே?
புருடு: நூறு அடிக்கு மேல இருக்கும்போது எப்படிப்பா கீழே இறங்க முடியும்? நல்ல வேளையா, ஒரு ஹெலிகாப்டர் அந்தப்பக்கம் சும்மா பறந்துகொண்டிருந்தது. நான் சத்தம் போட்டு அந்த பைலட்டை கூப்பிட்டு " சார், என்னை காப்பாத்துங்க, இராவணன் சீதையை தூக்கிக்கொண்டு போனதுபோல என்னை யாரோ என் வீட்டோட தூக்கிண்டு போறாங்க"
இதை கேட்டவுடன் ஹெலிகாப்டர் என் வீட்டு மொட்டைமாடியில் வந்து நின்னது. அதிலிருந்தவர் "வா, சீக்கிரம் ஹெலிகாப்டரில் ஏறு. இப்போ காத்து பயங்கரமாக அடிக்குது" அப்படீன்னார். நானும் சட்டுன்னு போர்த்தியிருந்த போர்வையுடன் அந்த ஹெலிகாப்டரில் ஏறிட்டேன் .
சுருடு: அப்புறம் என்ன ஆச்சு?
புருடு: நீ என்ன சினிமா கதையா கேக்கிறே. அந்த ஹெலிகாப்டர் பைலட் என்னை ரொம்பவும் திட்டிவிட்டார்.
சுருடு: ஐயோ, ஏன்பா திட்டினார்?
புருடு: நான் அவரிடம் சொன்னேன் "அதோ பறந்துபோகுது பாருங்க, இந்த கப்பல் போல வீடு. இது என்னுடையதுதான்". அதை கேட்டு அவர் "ஏன்டா மடையா, ஒருமாசத்துக்கு முன்னாடி இந்த வீட்டை எனக்கு வித்திருந்தா, நான் வாங்கி போட்டிருப்பேன். இப்போ பாரு, யாருக்கும் பயனில்லாமல் உன் வீடு அம்போனு அந்தரத்தில் பறந்துபோகுது".
சுருடு:???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Jun-24, 11:44 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 54

சிறந்த நகைச்சுவைகள்

மேலே