இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது – நாலடியார் 244

நேரிசை வெண்பா
(’ம்’ ’ஞ்’ ‘ங்’ மெல்லின எதுகை)

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; - ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது 244

அறிவுடைமை, நாலடியார்

பொருளுரை:

வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது;

அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந்தீயதாய் மாறும் வகை அரிதாயிருக்கும்.

கருத்து:

தம் இயல்பில் அறிவுடைமை தீய சார்பினின்று காக்கும்.

விளக்கம்:

சார்பினால் இயல்பு திரியாமை கூறினமையின், இயற்கை அறிவுடைமை பெறப்பட்டது.

பெரும்பான்மையுந் தீதாதல் இன்மையின், ‘அரிது' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-22, 8:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே