இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது – நாலடியார் 244
நேரிசை வெண்பா
(’ம்’ ’ஞ்’ ‘ங்’ மெல்லின எதுகை)
வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; - ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது 244
அறிவுடைமை, நாலடியார்
பொருளுரை:
வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது;
அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந்தீயதாய் மாறும் வகை அரிதாயிருக்கும்.
கருத்து:
தம் இயல்பில் அறிவுடைமை தீய சார்பினின்று காக்கும்.
விளக்கம்:
சார்பினால் இயல்பு திரியாமை கூறினமையின், இயற்கை அறிவுடைமை பெறப்பட்டது.
பெரும்பான்மையுந் தீதாதல் இன்மையின், ‘அரிது' என்றார்.