பள்ளிக்கூட நாட்கள்

பள்ளிக்கூட நாட்கள்

பள்ளிக்கூட நினைவுகள்
பாடம் கற்ற தருணங்கள்
பரவசம் தரும் உணர்வுகள்
வார்த்தையில் அடங்காத வரிகளாக
வர்ணிக்க முடியாத வார்த்தைகளாக
வசந்த கால நிகழ்வுகளாக
என்றும் நம் உள்ளத்தில்
நீங்காத நினைவலைகளாக.....

சூரியனின் வெப்பம் மறந்து
சுடு மண்ணில் சுகம் கண்டோம்...
பகலவனின் பரிகாசத்தில்
பட்டாம்பூச்சியாய் பறந்திருந்தோம்...
பல வீட்டு சமபந்தி விருந்தில்
பகிர்ந்து உண்ணும் கலை அறிந்தோம்....

ஆலமரத்தின் விழுதுகள் ஏறி
ஆகாயம் தொட முயற்சி செய்தோம்...
ஒற்றை கீத்து மாங்காயில் ஒற்றுமையை உணர்த்திட்டோம்...
உயர்வு தாழ்வு நிலையற்று
உன்னதமாய் உறவு கொண்டோம்....

வகுப்பறையில் அரட்டையடித்து
வாத்தியாரை அலற வைத்தோம்...
வெட்கங்களை துறந்து விட்டு
வேடிக்கையாய் கதை படித்தோம்...
வான் மழையின் தூறல்களில்
வண்ண மயிலாய் வட்டமடித்தோம்....

புத்தகப்பையின் சுமை மறந்து புயல் காற்றுடன் பந்தயம் வைத்தோம்....
மணிக்கணக்கில் கதை பேசி
மனக்கணக்கை காற்றில் விட்டோம்....
சிரிப்பலைகளின் சிதறல்களில்
சித்தம் கலங்கி களித்திருந்தோம்....

பூவா தலையா போட்டுப்பார்த்து
புதிருக்கான விடை கண்டோம்...
பேனா தந்தால் பிரிவு வருமென
பேதமையில் திளைந்திருந்தோம்...
அலைபேசி இல்லா காலத்திலும்
ஆழ்மனதில் முகவரி சேமித்தோம்....

மதிப்பெண்களை மறந்து விட்டு
மகிழ்ச்சியாக கல்வி கற்றோம்...
பரீட்சைகளை தவற விட்டு
பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றோம்...
கற்பித்த ஆசிரியரை
காலத்திற்கும் நினைத்திருந்தோம்.....

உணர்வுகளின் உள்ளக்கிடங்காக...
நினைவுகளின் நெஞ்சக்குவியலாக...
மறக்க முடியாத மகிழ்வுப்பெட்டகமாக...
மரணம் வரை உயிர்த்துடிப்பாக...
நம் வாழ்வின் நீங்கா நினைவலைகளாக...
நம் பள்ளிக்கூட நாட்கள்......

-சாந்தீஸ்வரி ராஜாங்கம்

எழுதியவர் : சாந்தீஸ்வரி ராஜாங்கம் (4-Jul-22, 10:15 am)
Tanglish : pallikkooda nadkal
பார்வை : 83

மேலே