முதல்விட்டு அஃதொழிந்தார் ஓம்பா ஒழுக்கம் முயல்விட்டுக் காக்கை தினல் - பழமொழி நானூறு 141

நேரிசை வெண்பா

அற்றாக நோக்கி அறத்திற்(கு) அருளுடைமை
முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற
முதல்விட்(டு) அஃதொழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
முயல்விட்டுக் காக்கை தினல். 141

- பழமொழி நானூறு

பொருளுரை:

அறத்தினுக்கு அருள் உடையரா யிருத்தல் பண்பாதலை ஆராய்ந்து அதன் திறனை முழுதும் அறிந்தார்கள் காரணம் அறிந்து அறம் செய்வாரெனப்படுவார், தெளிவாக காரணமாகிய அருளைவிட்டு திறந் தெரியாமையான் அவ்வறத்தையும் கைவிட்டாருடைய பாதுகாவாத கொடை நிலத்தில் கண்ணோடும் முயலைவிட்டு, ஆகாயத்தில் செல்லும் காக்கையைப் பின் தொடர்ந்து சென்று தின்ன முயலுதலை யொக்கும்.

கருத்து:

அருளோடு கூடிய அறம் சிறந்தது என்றது இது.

விளக்கம்:

ஓம்பா ஒழுக்கமாவது தீயவர்களுக்குச் செய்யும் உதவி முயலை விட்டுக் காக்கைப் பின் செல்வார் அதனைப் பெறமுடியாதவாறு போல, இத்தீயவர்களுக்குக் கொடுக்கும் கொடையால் நன்மை யடைதலும் முடியாது. 'அஃதும்' என்பதிலுள்ள உம்மை தொக்கது ‘முயல் தசை' ‘காக்கையின் தசை' என்றல் பொருத்தமன் றென்க.

'இனைய தன்மையன் என்றறிவரியவன் தனைமுன் விட்டுத் தாமற்று நினைப்போர் மாமுயல் விட்டுக் காக்கை பின்போங் கலவர் போலவும்' என்ற இடத்தும் தசை குறிப்பிடப்படாமை அறியத்தக்கது;.எளிதில் அடையக்கூடியதை விட்டு அரிது முயன்றும் அடையக் கூடாததற்கு ஆளப்படும் பழமொழி இது.

'முயல் விட்டுக் காக்கை தினல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-22, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே