வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி - பழமொழி நானூறு 157
இன்னிசை வெண்பா
வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை
புலிகலாங் கொள்யானைப் பூங்குன்ற நாட!
வலியலாந் தாக்கு வலிது. 157
- பழமொழி நானூறு
பொருளுரை:
புலியொடு மாறுபாடு கொள்ளும் யானையையுடைய அழகிய மலை நாடனே! தம்மின் வலியாரைக் கண்டவிடத்து வாயாலும் அடக்கமுடையராகி, தம்மின் மெலியாரிடத்து அடர்ந்து மிக்கு ஒழுகும் மேம்பாடுடைமை வலியில்லாத காலத்து வலிமை உண்டாயினவாறு போலும்.
கருத்து:
அரசன் தனக்கு மிக்க வலியில்லாத காலத்து வலியார்க்கு அஞ்சி மெலியார்மேல் மீதூர்ந்தொழுகுக என்றது இது.
விளக்கம்:
வலியார், மெலியார் என்புழி படை, பொருள், நீதி நூல்வழி யொழுகல் என்றிவை உடையாரும், அவையில்லாரும் என்பது கொள்ளப்படும்.
மிக்க வலியில்லாக் காலத்து வலியார்க்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கோடலும், மெலியாரை மீதூர்ந்து வலியுள தாக்கிக் கோடலும் தனக்கு வலிமையா மாதலின், 'வலியலாந் தாக்கு வலிது' என்றார்.
'வலியலாந் தாக்கு வலிது' என்பது பழமொழி.