வலவைகள் காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே மேலாறு பாய விருந்து – நாலடியார் 268
நேரிசை வெண்பா
வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்; - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து 268
- நன்னெறியில் செல்வம், நாலடியார்
பொருளுரை:
நாணமில்லாதவர்களில் சேர்க்கப்படாத நல்லோர் தம் வறுமையால் ஊர்விட்டு ஊர் கால்வழி நடந்து போய் அங்கங்குக் கிடைக்கும் இழிந்த கலவையுணவுகள் உண்டு காலங் கழிப்பர்;
ஆனால் நாணம் இல்லாத கீழ்மக்கள் கால் வழியும் நடந்து செல்லாராய், ஊர்திகளில் இறுமாந்து சென்று தம் மேல் நெய் பால் தயிரென்னும் ஆறுகள் பாய்ந்தொழுகக் கறிகளோடு விருந்துண்டு இன்புறுவார்.
கருத்து:
கீழ்மக்களின் செல்வம் வீண் களியாட்டங்கட்கே செலவாகும்.
விளக்கம்:
பலரிடமிருந்து சிறுகச் சிறுகக் கிடைக்கும் பல்வேறு உணவு கறிகளை ஒருங்கு சேர்க்க அஃது ஒரு வேளை யுணவுக்குப் போதியதாதலின், கலவை உணவு எனப்பட்டது;
காலாறுஞ் செல்லாரெனவே ஊர்திகளில் இறுமாந்து செல்வரென்பது பெறப்படும். கருனையாலென்னும் ஆலுருபு "பெண்டகையால் பேரமர்க்கட்டு"1 என்புழிப்போல உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.