நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார் – நாலடியார் 296

நேரிசை வெண்பா

மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் - நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார் 296

- மானம், நாலடியார்

பொருளுரை:

வளப்பமிக்க இப் பெரிய உலகில் உயிர்வாழ்பவர் எல்லாருள்ளும் பொருளுடையராயினும் பிறர்க்கொன்று உதவாத இயல்புடையார் வறியரேயாவர்;

வறுமையுற்ற விடத்தும் பொருளுடையாரிடம் சென்று ஒன்று இரவாதவர் பெருமுத்தரையரை யொத்த பெருஞ் செல்வரேயாவர்

கருத்து:

உலகத்தில் ஒன்று உதவும் நிலையும் இரவா நிலையுமே செல்வ நிலையாகும்.

விளக்கம்:

பெருமுத்தரைய1ரென்பார், இவ்வாசிரியர் காலத்தில் விளங்கிய பெருஞ் செல்வராவார்; பெருமுத்தரையரே என்னும் ஏகாரத்தை நல்கூர்ந்தார் என்பதற்கும் ஒட்டுக.

கொடாதவர் செல்வத்தாற் பயன் பெறாமையின், ‘நல்கூர்ந்தா' ரெனவும், நல்கூர்ந்தக் கண்ணும் மானத்தோடு மனவமைதியாய் வாழ்தலின் பிறரை இரவாதவர் பெருமுத்தரையரே யெனவுங் கூறப்பட்டனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-22, 8:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே