ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு – நாலடியார் 321

நேரிசை வெண்பா

அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு 321

- புல்லறிவாண்மை, நாலடியார்

பொருளுரை:

அருள் காரணமாக அறம் அறிவுறுத்தும் அன்புடைய பெரியோரது வாய்மொழியை அறிவுடையோர் பெரும் பயனுடையதாக மதித்தேற்றுக் கொள்வர்; ஆனால் அகப்பை பாலடிசிற் சுவையுணராமை போல ஒரு பொருளாகக் கருதற்கில்லாத அறிவிலான் அவ்வாய் மொழியை மதியாது இகழ்ந்துரைப்பான்.

கருத்து:

புல்லறிவாளர் நல்லோர் பொருளுரையை மதியாது ஒழுகுவர்.

விளக்கம்:

அன்பிருந்தாலன்றி அருள் பிறவாதாகலின், அருளோடு அன்பும் உரைக்கப்பட்டது. பொதுவாக அறிஞரென்றற்கு ஈண்டுப் ‘புலவர்' எனப்பட்டது;

அகப்பை சுவையுணராமை போல, அறிவிலான் அன்புடையார் வாய்ச்சொல்லின் பெருமையுணரான் என்க.

உவமை: ஏழைக்கு உணரும் இயல்பில்லாமை உணர்த்திற்று; காரணம் புல்லறிவின் இயல்பு அத்தகையது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-22, 4:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே