114 எல்லாரினும் சிறந்த கணவனோடு இகலல் பழி - கணவன் மனைவியர் இயல்பு 6
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தந்தைதாய் சோதரரை நீங்கிமின்னா ரொருவன்கை
தன்னைப் பற்றிப்
பந்தமுற லாலவரெல் லாரினுமிக் குரிமையுளான்
பத்தா வன்றோ
இந்தநிலை யுணராம லவனையிகல் செயுமேழை
யிகப ரத்தை
நிந்தையுற வழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல்
நிகர்கு மாதோ. 6
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்,
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பொருளுரை:
தந்தை தாய் சகோதரர்களை விட்டு பெண்கள் வேறொரு ஆடவன் கைகளைப்பற்றி கணவன் என்று சொந்தமாக உறவு கொள்வதால், அவர்கள் எல்லோரையும் விட மிகவும் உரிமையுடையவன் கணவன் அல்லவா!
இதனை உணராமல் கணவனுடன் மாறுகொள்ளும் பெண் இம்மை, மறுமை நலங்களைப் பழியுண்டாகக் கெடுத்தலால் தன்னைத் தானே கொலை செய்து கொண்டதற்கு நிகராகும் அல்லவா! என்றும் இவ்வாசிரியர் சொல்கிறார்.
மின்னார்-பெண்கள். இகல்-மாறுபாடு. நிந்தை-பழி.
தந்தை தாய் தூண்டுகோலாய் இல்லாமல் தகுந்த புத்திமதி சொன்னால் பெண்கள் திருந்தி கணவனோடு இணக்கமாக வாழ வழியுண்டு.