ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார் – நாலடியார் 329
நேரிசை வெண்பா
(’ஐ’ அ’ய்’ அ மோனை, ‘ய்’ இடையின ஆசு)
வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி, - மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார் 329
- புல்லறிவாண்மை, நாலடியார்
பொருளுரை:
கையிற் பொருளில்லாத வறுமைக் காலத்தும், மிக்க நோயுண்டான நேரத்தும் மறுமைக்குரிய அறநினைவினராயிருந்து, செல்வம் முதலியவற்றால் ஆற்றல் வாய்ந்த காலத்தில் அம்மறுமைக்குரிய அறத்தைச் சிறுகடுகின் அளவாயினும் புல்லறிவினார் கருதார்.
கருத்து:
புல்லறிவு துன்பக் காலத்தில் மட்டுமே நன்மையை நினையும் இயல்புடையது.
விளக்கம்:
மறுமைக்குரிய அறம் ஈரிடங்களிலும் ‘மறுமை' யெனப்பட்டது. ஐந்தை:ஐயென்னுஞ் சிறுமையடியாகப் பிறந்த சொல்.
ஆற்றுந்தகுதி - பொருந்திய காலம் இங்கு ஆற்றிய காலம் எனப்பட்டது;
"பின்னை வழி நினைந்து, நோய்காண் பொழுதின் அறஞ் செய்வார்க் காணாமை நாய்காணிற் கற் காணாவாறு"1 ஆதலின் அவரைச் சிற்றறிவினார் என்றார்!